இளம் தாமரை மாநாட்டுக்கு வரும் மோடியை பார்க்க ஆன்–லைனில் பதிவு: இளைஞர்கள் ஆர்வம்
திருச்சி: திருச்சியில் நடைபெறும் இளம் தாமரை மாநாட்டுக்கு பேச வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை காண இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆன்-லைன் மூலமும் ஆயிரக்கணக்கானவர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக சார்பில் வரும் 26-ந்தேதி திருச்சியில் இளைஞர் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் நரேந்திர மோடி பேச உள்ளார்.
இந்த பொதுக் கூட்டத்துக்கு திருச்சி பைபாஸ் ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அமர்வதற்காக டெல்லி செங்கோட்டை வடிவில் பிரமாண்டமான மேடை அமைக்கப்படுகிறது.
நரேந்திர மோடி பங்கேற்றும் கூட்டம் என்பதால் மாநிலம் முழுவதிலும் இருந்து இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்களை பெருமளவில் திரட்ட தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
கூட்டத்துக்கு வருபவர்கள் முன்கூட்டியே பெயர் பதிவு செய்வதற்காக மாவட்ட வாரியாக விண்ணப்ப படிவங்கள் மூலம் பெயர் சேர்க்கை நடந்து வருகிறது.
ஆன்-லைன் மூலமும் பெயர் பதிவு செய்யும் முறையை பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவினர் நேற்று தொடங்கினார்கள். நேற்று மாலை 5 மணி முதல் இந்த வெப்செட் செயல்பட தொடங்கியது. ஒரே நாளில் நரேந்திர மோடியை பார்க்க சுமார் 1500 பேர் பெயர் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.