அமைச்சரை நடிகையோடு தொடர்புபடுத்தி செய்தி: நக்கீரன்… ஆசிரியர் கோபால் மீது அவதூறு வழக்கு
தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் சார்பில், நகர குற்றவியல் அரசுத் தலைமை வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நக்கீரன் வாரப்பத்திரிகையின் கடந்த ஆகஸ்டு முதல் வார பத்திரிகையில் 'முடங்கிய நிர்வாகம், மந்திரியோ நடிகையுடன் கும்மாளம்' என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. அதில், அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தைப் பற்றிய அவதூறான தகவல்கள் வெளியாகி இருந்தன.
அந்தத் தகவல்களால் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை. உள்நோக்கத்துடன் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனவே அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ், தலைமை நிருபர் இளையசெல்வன் மற்றும் நிருபர்கள் உட்பட 20 பேர் மீது அவதூறு குற்றத்தின் கீழ் தண்டனை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.