ஒரு ராஜ்யசபா சீட்... ஜெ.விடம் ஆதரவு கேட்ட பிரகாஷ்காரத்
சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ராஜ்யசபா தேர்தலுக்கு இப்போதே அதிமுகவிடன் 'துண்டு போட்டு வைத்துவிட்டது' மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் இது பற்றி விவாதித்திருக்கிறார்.
அண்மையில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருந்தது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. டி.கே.ரங்கராஜனின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைகிறது.
இதனால் அதிமுக ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கட்சி ஒரு எம்.பி.யை அனுப்பி வைக்க தீர்மானித்தது. இது தொடர்பாகவே ஜெயலலிதாவிடம் பிரகாஷ் காரத் விவாதித்தததாக மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் லோக்சபா தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்யும் விதமாகவும் இந்த சந்திப்பில் ஜெயலலிதாவுடன் பிரகாஷ் காரத் பேசியதாகவும் தெரிகிறது.