சென்னையில் பகலில் வெயில்… இரவில் சூறை காற்றுடன் கனமழை
சென்னை: சென்னையில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு நேரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி குளிர்ச்சியை ஏற்படுத்தியது.
இலங்கையின் மேல் அடுக்கில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால், கடலோர மாவட்டங்களில் எதிர்பார்த்த மழை இல்லை. இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் திடீரென மழை கொட்டியது. காலை முதலே அக்னி நட்சத்திரம் போல வெயில் சுட்டெரித்தது.
இந்த நிலையில் இரவு நேரத்தில் லேசான குளிர் காற்று பரவியது. பின்னர் 10 மணிக்கு மேல் திடீரென சூறை காற்றுடன் இடி-மின்னலோடு மழை பெய்தது.

மழையோடு காற்றும் அதிகம் வீசியதால், சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு மத்தியிலேயே சென்றனர்.
சூறை காற்றுக்கு ஒரு சில பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள் கீழே விழுந்தன. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.
மயிலாப்பூர், மந்தைவெளி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
காலையில் அடித்த வெயிலுக்கு இரவில் பெய்த மழையால் குளிர்ச்சி பரவியதால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.












Click it and Unblock the Notifications