அமெரிக்க பள்ளியில் மாணவன் குத்திக் கொலை, 3 பேர் காயம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் உள்ளது ஸ்பிரிங் உயர் நிலைப் பள்ளி. 3,000 மாணவ, மாணவியர் படிக்கும் அந்த பள்ளியில் திடீர் என்று ஒரு சில மாணவர்களுக்கு இடையே வராண்டாவில் நேற்று காலை 7 மணிக்கு மோதல் நடந்தது. இதில் 17 வயது மாணவர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார். மேலும் 3 மாணவர்கள் காயம் அடைந்தனர். அதில் ஒரு மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இறந்த மாணவரின் பெயரை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. ஆனால் அவருடைய பெயர் ஜோஷ்வா ப்ரூஸ்ஸார்ட் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பள்ளியில் படிக்கும் லூயிஸ் ஆலோன்சோ அல்ஃபாரோ(17) என்ற மாணவனை பிடித்து விசாரித்தில் சக மாணவனைக் குத்திக் கொன்றதை அவர் ஒப்புக் கொண்டதாகவும், இதையடுத்து அவர் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் ஹாரிஸ் கவுன்ட்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆலோன்சோ தவிர மேலும் 2 மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.