புனே மருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க வருகிறது இ-டேக் திட்டம்
புனே: அரசு மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் திருடுபோவதை தடுக்க ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த புனே முனிசிபல் கார்பரேஷன் முடிவு செய்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் திருடுபோவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க புனே முனிசிபல் கார்பரேஷன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. முதல்கட்டமாக இந்த திட்டம் கமலா நேரு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
பிரசவத்திற்காக பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படும். தாயின் கைரேகை எலக்ட்ரானிக் மெஷினில் பதியப்படும். இதையடுத்து குழந்தை பிறந்த பிறகு அதன் கால் ரேகையும் எலக்ட்ரானிக் மெஷினில் பதிவு செய்யப்படும். மேலும் குழந்தையின் முழங்காலிலும், தாயின் கையிலும் எலக்ட்ரானிக் டேக் கட்டப்படும்.
இந்த டேக் மூலம் குழந்தையின் அசைவை கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்க முடியும். குழந்தைகளை வைத்திருக்கும் அறையில் இருந்து யாராவது குழந்தையை தூக்கிச் சென்றால் சைரன் கத்தும். அதன் மூலம் ஊழியர்கள் வந்து குழந்தையை காப்பாற்ற முடியும். தாய் மற்றும் குழந்தையின் கையில் உள்ள டேக்கில் இருக்கும் கோடிங்கால் குழந்தை மாற வாய்ப்பில்லை.
ரூ.75 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும் இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை பார்த்துவிட்டு பிற மருத்துவமனைகளிலும் அறிமுகப்படுத்த புனே முனிசிபல் கார்பரேஷன் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications