பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அடுத்த வாரம் அறிவிக்கப்படுகிறார்?
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அறிவிக்கப்படக் கூடும் என்று டெல்லி செய்திகள் வெளியாகி உள்ளன.
வரும் நவம்பர் மாதம் மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதுதான் லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.

இதனால் 5 மாநில சட்டசபை தேர்தலை ஒரு மினி லோக்சபா தேர்தலாக அனைத்து கட்சிகளும் எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. பாரதிய ஜனதாவில் பெரும் சலசலப்புகளுக்கு இடையே லோக்சபா தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து எந்த நேரத்திலும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி போன்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே தாம் 2017ஆம் ஆண்டு வரை குஜராத் மக்களின் முதல்வராக பணியாற்றுவேன் என்று நரேந்திர மோடியும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா மூத்த தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிற நிலையில் இறுதி முடிவெடுத்தாக வேண்டிய நிலைக்கு பாஜகவும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ம் தள்ளப்பட்டுள்ளன.
இதனால் நாளை டெல்லியில் மீண்டும் ஆர்.எஸ்.எஸ்.- பாரதிய ஜனதா தலைவர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது தொடர்பான இறுதி முடிவெடுக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications