சிரியா மீது ‘3 நாள் அதிரடி ஏவுகணைத் தாக்குதல்’ நடத்த அமெரிக்கா திட்டம்
வாஷிங்டன்: சிரியா மீது 3 நாட்கள் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த மூன்று நாட்களிலும் அதி தீவிரமான தாக்குதலை சிரியா மீது நடத்த அமெரிக்க படைகள் தயாராகி வருகின்றனவாம்.
இந்த செய்தியை லாஸ் ஏஞ்செலஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
ஏவுகணைத் தாக்குதல்...
ஏவுகணைத் தாக்குதலே இதில் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறதாம். பலமுனைகளிலிருந்து இத்தாக்குதலை நடத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாம்.
முதல்கட்டமாக 50 இலக்குகள்...
முதலில் 50 இலக்குகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கூடுதல் இலக்குகளை சேர்க்குமாறு வெள்ளை மாளிகை நிர்வாகம் அமெரிக்க ராணுவத்தைக் கேட்டுக் கொண்டுள்ளதாம்.
அதிரடித்தாக்குதல்....
சிரியப் படையினர் எந்தவிதத்திலும் சுதாரிக்காத வகையில் அதிரடியாக தாக்குதலை நடத்தி முடிக்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளதாம்.
ஏவுகணை அழிப்பு விமானங்கள்...
அமெரிக்க விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்களை பெருமளவில் பயன்படுத்தவும், ஐந்து அமெரிக்க ஏவுகணை அழிப்பு விமானங்களும் பயன்படுத்தப்படவுள்ளனவாம்.
குரூஸ் ஏவுகணைகள்....
குரூஸ் ஏவுகணைகள், வானிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளையும் பெருமளவில் பயன்படுத்தவுள்ளதாம் அமெரிக்கா.
நிமிட்ஸ் போர்க்கப்பல்....
செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் நிமிட்ஸ் போர்க் கப்பல் முக்கியத் தாக்குதலை நிகழ்த்தவுள்ளதாக தெரிகிறது.
3 நாள் தாக்குதல்....
72 மணி நேரத்தில் அதாவது 3 நாட்களுக்குள் அத்தனை தாக்குதலையும் முடித்து சிரியாவை அதிபர் அஸ்ஸாத்தின் பிடியிலிருந்து விடுவிக்கும் வகையில் தாக்குதல் இருக்கும் என்று அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.