கருக்கலைப்பில் கைதான பெண்கள் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்.. வேலூர் சிறையில் அடைப்பு
ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே கருக்கலைப்பு செய்த பெண் இறந்தார். இதுதொடர்பாக கைதான மெடிக்கல் உரிமையாளர், அவரது உதவியாளர் என 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்த நிலையில் வேலூர் பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி செல்வி 30. இவர் கர்ப்பமாக இருந்தார்.
இதனால் அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்கு செய்து வந்தார். இந்நிலையில் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு உள்ளது என டாக்டர்கள் கூறினர். இதனால் அவர் மனம் உடைந்தார். மேலும் குறைபாட்டுடன் குழந்தை பிறந்தால் சிரமம் ஏற்படும் என நினைத்தார்.

கருக்கலைப்பு
இதனால் கருவை கலைக்க முடிவு செய்தார். இதையடுத்து கீழ்பாடி கிராமத்தில் மெடிக்கல் வைத்துள்ள மதுரை மாவட்டம் மேலூர் ஆலம்பாடியை சேர்ந்த மணிகண்டன் மனைவி முத்துக்குமாரி 40, என்பவர் செல்விக்கு கருக்கலைப்பு செய்தார். அ பாண்டலத்தை சேர்ந்த அருண் மனைவி கவிதா 35, உதவியாளராக இருந்தார்.

பெண் பலி; இருவர் கைது
இதையடுத்து செல்வி இறந்தார். இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 22ல் நடந்தது. இகுறித்து ரிஷிவந்தியம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். மேலும் முத்துக்குமாரி, கவிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

எஸ்பி பரிந்துரை
இதற்கிடையே கருக்கலைப்பு செய்ததில் பெண் இறந்ததால் இதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதனால் முத்துக்குமாரி, கவிதா ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி செல்வக்குமார், கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டத்தில் கைது
இந்நிலையில் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவில் இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவு நகல் கடலுார் மத்திய சிறையில் இருந்த முத்துக்குமாரி, கவிதா ஆகியோரிடம் வழங்கப்பட்டது. அதன்பின் இருவரும் வேலுாரில் உள்ள பெண்களுக்கான தனிசிறையில் அடைக்கப்பட்டனர். கருக்கலைப்பில் பெண் இறந்த வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்வது இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications