துபாயை போல் அபுதாபியிலும் கை நிறைய முதலீடு.. தமிழகத்தில் ரூ 3500 கோடி முதலீடு செய்கிறது லூலூ!
அபுதாபி: தமிழகத்தில் ரூ 3500 கோடியில் முதலீடு செய்ய லூலூ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில் முதலீட்டையும் வேலைவாய்ப்பையும் பெருக்குவதற்காக துபாய் சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவருடன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
துபாயில் உலக அளவில் நடந்த எக்ஸ்போவில் தமிழக அரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் துபாயில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீட்டாளர்களை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

லூலூ நிறுவனம்
இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் லூலூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் யூசுப் அலி இருந்தார். இதையடுத்து தமிழகத்தில் ரூ 1600 கோடி மதிப்பில் முதலீடு செய்வதற்காக 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த நிலையில் கடல் கடந்து கை நிறைய முதலீடுகளை ஈர்த்ததாக கடிதம் எழுதியிருந்த முதல்வர் ஸ்டாலின் நேற்று அபுதாபி சென்றார்.

ரூ 3500 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம்
இங்குள்ள ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் சந்திப்பு கூட்டம் நடத்தினார். பின்னர் முதலீட்டாளர்களுடனும் சந்திப்பு கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தினார். அப்போது தமிழகத்தில் ரூ3500 கோடியில் முதலீடு செய்ய லூலூ நிறுவனத்தின் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

யார் இந்த லூலூ எம்டி?
அபுதாபியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் யூசுப் அலி கையெழுத்திட்டார். தமிழகத்தில் 3 திட்டங்களின் கீழ் இந்த ரூ 3500 கோடி முதலீடு செய்யப்படுகிறது. கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் யூசுப் அலி. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகப் பெரிய பிசினஸ்மேனாக உள்ளார்.

ஷாப்பிங் மால்கள்
லூலூ குரூப் ஆப் இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவருக்கு சொந்தமாக ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், ரிசார்டுகள் உள்ளிட்டவை உள்ளன. இவர் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் நல்ல நட்பில் இருந்து வருகிறார். தமிழகத்தில் இரு ஷாப்பிங் மால்களையும் உணவு பதப்படுத்தும் ஆலையையும் தொடங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் 5000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க பெறும்.












Click it and Unblock the Notifications