கொள்ளிடம் ஆற்றில் 3 மாணவர்கள் சடலமாக மீட்பு.. பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின் அதிர்ச்சி!
அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த 9 மாணவர்கள் ஆற்றில் மூழ்கிய நிலையில், அவர்களில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்ற 3 பேரை தேடி வந்த நிலையில் அவர்கள் சற்று முன்பு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியில் திருமானூரில் கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது மாணவரான பச்சையப்பன் என்பவர் ஆற்றில் சிக்கிக் கொண்டார்.

பச்சையப்பனை காப்பாற்ற முயன்ற மற்ற மாணவர்களும் ஆற்றில் சிக்கியுள்ளனர். இதையடுத்து, அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 3 பேரை தேடும் பணி நடைபெற்று வந்தது.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த திருமானூர் காவல்துறையினர், உயிருடன் மீட்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாயமான 3 மாணவர்களை மீட்கும் பணியை தொடர்ந்து வந்தனர்.
இந்நிலையில், ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 6 பேரை பொதுமக்கள் உடனடியாக மீட்டு உயிரைக் காப்பாற்றிய நிலையில், 3 மாணவர்கள் மாயமாகினர். அவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வந்தபோது பாலத்தின் ஓரு பகுதியில் சுமார் 30 அடிக்கும் மேலாக பள்ளம் ஏற்றப்பட்டுள்ளது. அந்த பள்ளத்தில் தற்போது அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனை அறியாத இளைஞர்கள் அப்பகுதியில் குளித்த நிலையில், ஆழத்தில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
குளிக்க ஆற்றில் இறங்கிய மாணவர்களில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications