மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்!
அரியலூர்: வன்னியர்களும் பட்டியல் சமூக மக்களும் அடித்துக் கொள்ள வேண்டும் என திமுக நினைக்கிறது எனவும், பாமகவிற்கும்,விசிகவிற்கும் இடையே பிரச்சனையை உருவாக்கியதே திமுக தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். மேலும், மின்சாரத் துறையின் உண்மையான அமைச்சராக செந்தில் பாலாஜி தான் இருக்கிறார் எனவும் கூறியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தில் பேசிய அவர்," தமிழ்நாட்டில் இன்று சாதாரண எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் கூட கஞ்சா, ஸ்டாம்ப் உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தக்கூடிய மோசமான சூழலை திமுக அரசு உருவாக்கி விட்டது.

2026 சட்டசபை தேர்தல்
அடுத்த தலைமுறை போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட கேடுகெட்ட திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு ஒடுக்கப்பட்ட பட்டியல் இன மக்களின் வாக்குகள் மட்டும் தான் வேண்டும் ஆனால் இவர்கள் படித்துவிட்டு வேலைக்கு போய் விடக்கூடாது என நினைக்கிறார். கடைசி வரை கூலி தொழிலாளியாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்.
செந்தில் பாலாஜி
இந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர் சிவசங்கர் எதற்கும் பயனில்லாதவர். 'மாப்பிள்ளை இவர்தான் ஆனால் சட்டை என்னுடையது' என்ற காமெடி போல எஸ்.எஸ். சிவசங்கர் பெயரளவுக்குத்தான் மின்சார துறை அமைச்சர். ஆனால் உண்மையான அமைச்சராக செந்தில் பாலாஜி தான் செயல்படுகிறார். கையெழுத்து போட மட்டும் தான் எஸ்.எஸ். சிவசங்கர் இருக்கிறார்.
சாதிவாரி கணக்கெடுப்பு
ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக வேட்பாளர் வைத்தியலிங்கம் வெற்றி பெற்றால் இந்த மாவட்ட மக்களுக்கு தேவையான கல்வி வேலை வாய்ப்பு உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பார். அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பாமக வேட்பாளர் வைத்தியலிங்கம் பாடுபடுவார். அண்டை மாவட்டங்களான ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் பீஹார் போன்ற மாநிலங்களில் கூட சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து விட்டார்கள்.
மு.க. ஸ்டாலின்
ஆனால் அதிகாரம் அனைத்தையும் வைத்துக்கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மறுக்கிறார்கள் காரணம் அவர் சமூக நீதிக்கு எதிரானவர். சமூகநீதியை பற்றி பேச தகுதி இல்லாதவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின். தேர்தல் வந்துவிட்டது பணம் மூட்டையை எடுத்துக் கொண்டு வருவார்கள் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ஓட்டுகள் கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள்
திமுக ஆட்சி
6கோடியே 75 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்காளருக்கு ஆயிரம் ரூபாய் என்றால் கணக்கு போட்டுப் பாருங்கள் திமுக எவ்வளவு கோடிகளை கொள்ளையடித்து வைத்திருக்கிறார்கள் என்று.. வாக்குக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் சரி இந்த குழந்தைகளை கொலை செய்கிற,விவசாயிகளுக்கு துரோகம் செய்கிற, நெசவாளர்களை மதிக்கத் தெரியாத, இளைஞர்களுக்கு வேலை கொடுப்பாத அரசு ஊழியர்களை ஏமாற்றிய இந்த திமுக ஆட்சியை விரட்டி அடியுங்கள்.
திமுக 8000 கூப்பன்
திமுகவினர் ஒரு டூப்ளிகேட் கூப்பனை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த கூப்பிடு தூக்கி குப்பையில் போடுங்கள் பொதுமக்கள் ஏமாந்து விடாதீர்கள். தப்பி தவறி திமுக ஆட்சிக்கு வந்தாலும் அந்த 8000 கூப்பனை திமுகவில் மட்டும் தான் கொடுப்பார்கள் பொது மக்களுக்கு கிடைக்காது. அதனால் தயவு செய்து இதுவரை ஏமாந்தது போதும் இனிமேல் ஏமாந்து விடாதீர்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அனைவருக்கும்பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுப்போம், வீட்டிற்கு ஒரு பிரிட்ஜ் கொடுப்போம் என்று சொல்லி இருக்கிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications