ஸ்காட்லாந்தில் இறந்த அரியலூர் இளைஞர்... பெற்றோரிடம் உடலை மீட்டுத்தந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
அரியலூர்: லண்டனுக்கு பணிக்கு சென்ற இடத்தில் மாரடைப்பால் உயிரிழந்த அரியலூர் இளைஞரின் உடலை, இந்திய ஹை கமிஷனிடம் பேசி பெற்றோரிடம் மீட்டுக் கொடுத்துள்ளார் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
கடந்த மே மாதம் 23-ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்த அரியலூர் இளைஞர் வினோத்தின் உடல் இன்று அவரது சொந்த ஊரான உதயநத்தம் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தங்கள் மகனின் உடலை மீட்டுக்கொடுத்ததற்காக தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.க்கு வினோத்தின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

உதயநத்தம் கிராமம்
அரியலூர் மாவட்டம் உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். மென் பொறியாளரான இவர் இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தில் பணியாற்றி வந்திருக்கிறார். அவருக்கு கடந்த மே மாதம் 23-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அவரது பெற்றோர் இறங்கினர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனைத் தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்துள்ளனர்.

பொதுவான பதில்
கொரோனா ஊரடங்கு காரணமாக, விமான சேவை இல்லை, தளத்தில் பதிவு செய்யுங்கள், விமானம் இயங்கும் போது முன்னுரிமை தருகிறோம் என்று லண்டனில் இருந்து பதில் கிடைத்திருக்கிறது. உடனடியாக எதிர்வினையாற்றிய தமிழச்சி, "இது போன்ற பொதுவான பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. விமானங்கள் இயங்கவில்லை என எனக்கு நன்றாகத் தெரியும். இறந்தவர் உடல் மற்றும் அவரது மனைவி, மகளைத் தமிழகம் என்றில்லை இந்தியாவில் எந்த விமான நிலையத்திற்கு விமானம் இயக்கப்பட்டாலும் உடனடியாக அனுப்பி வையுங்கள்" என அழுத்தம் கொடுத்தார்.

தொடர் வலியுறுத்தல்
தொடர்ச்சியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக உயர்அதிகாரிகளிடம் தமிழச்சி தங்கபாண்டியன் கொடுத்த கோரிக்கைகள் , தொலைபேசி வழி நினைவூட்டல் காரணமாக, நேற்று மதியம் 1.30 மணி அளவில் ஸ்காட்லாந்தில் இறந்த அரியலூர் இளைஞர் வினோத்தின் உடல் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், உதயநத்தம் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்கு பின் வினோத் உடல் இன்று அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கிராமத்தினர் நெகிழ்ச்சி
தங்கள் மகன் உடலை ஸ்காட்லாந்தில் இருந்து மீட்டு தங்களிடம் சேர்த்ததற்காக வினோத்தின் பெற்றோர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதேபோல் உதயநத்தம் கிராமமக்களும் இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை எப்போதும் தங்களால் மறக்கவே முடியாது எனக் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications