கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம்! ஆன் தி ஸ்பாட்டில் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!
அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தில் புதிதாக அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அரியலூரில் அரசு விழாவில் பேசிய அவர் திடீர் இன்ப அதிர்ச்சியாக இந்த அறிவிப்பை ஆன் தி ஸ்பாட்டில் வெளியிட்டார்.
மேலும், தமிழ்நாட்டினுடைய வரலாற்றுக் கருவூலமாக அரியலூர் திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரியலூர் என்றாலே பின் தங்கிய மாவட்டமாக கருதப்படும் நிலையில் அம்மாவட்டத்தின் பெருமைகளை முதல்வர் பட்டியலிட்டு பேசியுள்ளார். அதன் விவரம் வருமாறு;
அடுத்த மாஸ்.. முதல்வர் ஸ்டாலின் 2வது நாள் பயணமாக இன்று அரியலூர் செல்கிறார்.. ரெடியாகும் புது திட்டம்
வரலாற்று கருவூலம்
தமிழ்நாட்டினுடைய வரலாற்றுக் கருவூலமான அரியலூரில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவிற்கு, அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கென ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் தரவுகளின் வாயிலாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழினுடைய தொன்மையையும், தமிழ்ச் சமூகத்தினுடைய பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தொல்லியல் துறையில் ஒரு மறுமலர்ச்சியையே உருவாக்கியிருக்கிறோம்.
கங்கைகொண்ட சோழபுரம்
நேற்று கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரக்கூடிய அகழாய்வு அந்த பணிகளை எல்லாம் நாங்கள் நேரடியாக சென்று பார்வையிட்டோம். கங்கைகொண்ட சோழன், மும்முடிச் சோழன், உத்தமச் சோழன், பண்டிதச் சோழன், வீரசோழன் போன்ற பட்டங்களுக்குச் சொந்தக்காரரான சோழ மாமன்னர் இராஜேந்திர சோழன். தெற்காசிய நாடுகளை வென்று, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை தனது தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர்.
அருங்காட்சியகம் உருவாக்கப்படும்
இத்தகைய பெருமை வாய்ந்த மாமன்னர் இராஜேந்திர சோழனுக்குச் சிறப்பு சேர்க்கக்கூடிய வகையில், கடற்பயணம், கடல் வாணிகம் மற்றும் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதையும், மேலை நாடுகளுடனும், கீழை நாடுகளுடனும் சிறந்த வணிகத் தொடர்பு கொண்டிருந்ததையும், உலகுக்குப் பறைசாற்றும் வகையில், நான் நேற்று பார்த்து, கண்டு வியந்ததை மக்கள் அனைவரும் காணவேண்டும் என்பதற்காக கங்கைகொண்ட சோழபுரத்தில் ஓர் அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சி பொங்க நான் அறிவிக்கின்றேன்.
ஆடி திருவாதிரை விழா
சில மாதங்களுக்கு முன்பே, தஞ்சையில் மாமன்னர் ராஜராஜனுக்கு ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்படுவதைப்போல, மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு அரசு விழா கொண்டாடப்பட வேண்டும் என்பது அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடைய நீண்ட கால கோரிக்கையை ஏற்று மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரை விழாவினை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட ஆணையிடப்பட்டதையும் நான் இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன்.