மயிலாடுதுறையிலிருந்து நகர்ந்த சிறுத்தை.. அரியலூருக்குள் நுழைந்ததா? பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை!
அரியலூர்: மயிலாடுதுறையில் சுற்றி வந்த சிறுத்தை தற்போது அரியலூர் மாவட்டத்தில் நுழைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவு அளித்துள்ளார். பள்ளிக்கு சென்ற மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சிறுத்தையை பிடிப்பது குறித்து விளக்கமளித்த வனத்துறை, "கோமல் மற்றும் காஞ்சிவாய் பகுதியில் நண்டலாற்றுப் பகுதியை ஒட்டிய, சிறுத்தை நடமாடக் கூடிய முக்கிய இடங்களில் 4 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் ஏற்கெனவே சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட காவிரி ஆற்றின் சிற்றோடைகளில் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. முன்னதாக, சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட இடங்கள் மற்றும் சாத்தியக் கூறு உள்ள பகுதிகளில் 19 கேமரா டிராப்கள் பொருத்தப்பட்டுள்ளன. காவிரி ரயில்வே மேம்பாலத்தின் கீழே ஒரு கூண்டும், மஞ்சளாறு ஆற்றங்கரையோரம் 2 கூண்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கோயம்புத்தூரில் இருந்து வந்துள்ள நிபுணர் குழுவினர், 30 கேமரா டிராப்களுடன் களத்தில் பணியை தொடங்கியுள்ளனர். சிறுத்தை நடமாட்டம் மற்றும் அதன் பயன்பாட்டுப் பகுதியின் அமைப்பை அறிய காலை நேரங்களில் ட்ரோன் கேமராவும், இரவு நேரங்களில் தெர்மல் ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சிறுத்தை நடமாட்டம் குறித்து சமூக வலை தளங்களில் பரப்பப்படும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம். வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தது. ஆனால், சிறுத்தை இப்போது மயிலாடுதுறையை விட்டு அரியலூருக்கு இடம் பெயர்ந்திருக்கிறது.
அரியலூர் மாவட்டம் செந்துரை அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறுத்தை சென்றிருப்பது மருத்துவமனை சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியுள்ளது. எனவே கடந்த 10 நாட்களாக போக்கு காட்டி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சிறுத்தை இடப்பெயர்வு: வழக்கமாக அடர்ந்த காடுகளில் வாழும் சிறுத்தை காடுகளே இல்லாத டெல்லா பகுதிக்குள் எப்படி வந்தது? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து கூறும் வனவிலங்கு ஆர்வலர்கள்,
"இந்த இடப்பெயர்வு ஒரே நாளில் நடந்திருக்க முடியாது. காவிரி ஆற்றையொட்டி சிறுத்தை நகர்ந்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இப்படியே டெல்டாவை வந்திருக்கிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில்தான் சிறுத்தை இருக்கிறது. சரியாக சொல்வதெனில், குமரி தொடங்கி தேனி வரையும், ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களில் உள்ள மலைகளிலும் சிறுத்தைகள் வாழ்ந்து வருகின்றன" என்று கூறியுள்ளனர்.
சிறுத்தை ஒரு நாளைக்கு 50 கி.மீ வரை இயல்பாக நடக்கும் என்பதால், மயிலாடுதுறையிலிருந்து அரியலூருக்கு சென்றிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றும் வன விலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications