அரியலூரில் பட்டப்பகலில் பயங்கரம்.. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டிக் கொலை.. என்ன நடந்தது?
அரியலூர்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அரியலூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அசம்பாவிதத்தை தவிர்ப்பதற்காக ஜெயங்கொண்டம் பகுதி முழுவதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில் நிகழ்ந்த இந்தக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர்
தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (32). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, இவரது தங்கையின் திருமணம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. திருமணம் முடிந்த நிலையில், வழக்கறிஞர் சாமிநாதன் மண்டபத்திற்கு எதிரே உள்ள கடையில் நின்றுகொண்டு தேனீர் குடித்துக் கொண்டிருந்தார்.

பாய்ந்து வந்த மர்ம கும்பல்
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், திடீரென தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாளை எடுத்து சாமிநாதனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சாமிநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையிலான போலீஸார், சாமிநாதனின் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

முன்விரோதம்
போலீஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள திருப்பந்துறை கிராமத்தில் கடந்த 2020-ம் ஆண்டு செல்வமணி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்தில் சாமிநாதனுக்கு தொடர்பு இருப்பதாக அப்போது தகவல்கள் பரவின. எனவே அதுதொடர்பான முன்விரோததத்தின் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதனிடையே, தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்தார். ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொலை அரியலூர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பும்...
இதே அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அறிவழகன் (36) என்ற வழக்கறிஞர் உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விரும்பாத அவரது உறவினர்கள் சிலரே, அறிவழகனை வெட்டிக் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications