கொட்டித்தீர்த்த மழை! குறைகளை கேட்ட அமைச்சர் சிவசங்கர்! மனமார வாழ்த்திய மக்கள்!
அரியலூர்: அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் கொட்டித்தீர்த்த மழைக்கு இடையே மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி என்பதாலும் தன்னிடம் கோரிக்கை மனுக்களை கொடுப்பதற்காக மக்கள் காத்திருப்பார்கள் என்பதாலும் மழையை அமைச்சர் சிவசங்கர் பொருட்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
திருமாந்துறை, பெனகோணம், ஆடுதுறை, ஓகளூர், அத்தியூர், அகரம் சிகூர், ஊராட்சிகளில் தொடர் மழைக்கு மத்தியில் மக்களை சந்தித்தார் அமைச்சர் சிவசங்கர்.
அரியலூர் மாணவி சம்பவத்தில் காவல்துறை மீது குற்றம்சாட்டும் குழந்தைகள் ஆணையம்
பரவலாக மழை
புதிதாக உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் சுட்டெரிக்கும் வெயில் மறைந்து வானிலை குளுகுளுவென மாறியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் 6 கிராமங்களில் மக்களை நேரடியாக சந்தித்து குறை கேட்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மழைக்கு இடையே
ஆனால் மழை விட்டபாடில்லை. இதனால் அமைச்சர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா என்பது சந்தேகமே என கிராம மக்களிடம் அதிகாரிகள் கைவிரிக்க தொடங்கியிருக்கின்றனர். இதனிடையே சொன்ன நேரத்திற்கு கொட்டும் மழைக்கு இடையே அங்கு ஆஜரான அமைச்சர் சிவசங்கர், மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்ததுடன் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். மழைக்கு மத்தியிலும் தங்கள் கிராமத்திற்கு வருகை புரிந்த அமைச்சரை கண்டு கிராமமக்கள் மனமாற வாழ்த்தினர்.
தொகுதி முழுவதும்
சென்னையில் இல்லாமல் ஊரில் இருந்தால் தொகுதிக்குள் விசிட் அடிப்பது அமைச்சர் சிவசங்கரின் வழக்கமாம். துறை ரீதியான பணிகளுக்கு அடுத்தப்படியாக தொகுதி சார்ந்த பணிகளுக்கு மட்டுமே அமைச்சர் சிவசங்கர் அதிகம் முக்கியத்துவம் அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தான் திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு ஊர் ஊராக மக்களை சந்திக்க அடிக்கடி புறப்பட்டு விடுகிறாராம்.
நிறைய அமைச்சர்கள்
அமைச்சர் சிவசங்கரை போலவே இன்னும் பல அமைச்சர்கள் சென்னையை காட்டிலும் தொகுதியில் அதிக நேரத்தை செலவிடக்கூடியவர்களும் இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஆத்தூர் தொகுதி உறுப்பினரான அமைச்சர் பெரியசாமி, செஞ்சி தொகுதி உறுப்பினரான மஸ்தான், காங்கேயம் சாமிநாதன் போன்ற பலரையும் தொகுதியில் அடிக்கடி பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.