யாரும் மதம் மாற சொல்லவில்லை.. நாங்கள் ஒற்றுமையா இருக்கோம்.. அரசியலாக்காதீங்க -அரியலூர் கிராம மக்கள்
அரியலூர்: அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் மைக்கேல்பட்டி கிராம மக்கள் பாதுகாப்பு கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
Recommended Video
பள்ளி நிர்வாகம் மதம் மாறச் சொன்னதாக பொய் சொல்லுமாறு சிலர் ஊருக்குள் வந்து மிரட்டுகின்றனர், கிராம மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்திட முயற்சி நடக்கிறது என்று மைக்கேல்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். ஒரு தரப்பினருக்கு ஆதரவாக பேச சொல்லி, சிலர் ஊருக்குள் வந்து நிர்ப்பந்தம் செய்வதாக மைக்கேல் பட்டி கிராம மக்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
தஞ்சாவூரில் தங்கி படித்து வந்த அரியலூர் பிளஸ் டூ மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் என்பது தொடர்ந்து இருந்து வருகிறது. அரியலூர் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் அவருக்கு கொடுத்த மத மாற்ற அழுத்தம்தான் காரணம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.
அரியலூர் மாணவி
ஆனால் இது வெறும் வதந்தி என்று போலீசார் தரப்பு விளக்கம் அளித்துள்ளனர். இதில் வேண்டுமென்றே பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த மாணவிக்கு ஹாஸ்டல் வார்டன் வேலை கொடுத்து தொல்லை கொடுத்து இருக்கிறார். ஹாஸ்டல் வளாகத்தை சுத்தம் செய்ய சொல்லி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுதான் மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்று போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது .
தற்கொலை காரணம்
இந்நிலையில் மாணவியின் சொந்த ஊரான மைக்கேல்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், எங்கள் கிராமத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம். நாங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறோம்.. எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. இது வரை இப்பகுதியில் மதமாற்றம் என்கிற பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால் இதை சிலபேர் தவறாக பரப்பி வருகின்றனர்.
ஊர் மக்கள் மனு
இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம். ஆனால் எங்களை ஒரு தரப்பினருக்கு எதிராக பேச சொல்லி சிலர் நிர்பந்தம் செய்கின்றனர். மாணவி பற்றி விசாரிப்பது போல சிலர் ஊருக்குள் வருகிறார்கள். ஊருக்குள் வந்துவிட்டு.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பொய் பேச சொல்கிறார்கள். கிறிஸ்துவர்களுக்கு எதிராக பொய் பேச வேண்டும் என்று சிலர் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். கிறிஸ்துவர்கள் கட்டாயப்படுத்தி மதம் மாற சொன்னதாக பொய் சொல்ல சொல்கிறார்கள்.
யாரும் மதம் மாற சொல்லவில்லை
ஆனால் எங்களை யாரும் மதம் மாற சொல்லவில்லை. பள்ளி நிர்வாகம் மதம் மாறச் சொன்னதாக பொய் சொல்லுமாறு சிலர் ஊருக்குள் வந்து மிரட்டுகின்றனர், கிராம மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்திட முயற்சி நடக்கிறது. அந்த சிலர் யார் என்று சொல்ல முடியாது. மதவாத சக்திகள் எங்களிடம் பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார்கள் அந்த பள்ளி இந்த மாவட்டத்திற்கே பெருமையான பள்ளி.
வதந்தி
மாணவி இறந்ததை சிலர் மத பிரச்சனையாக்க பார்க்கிறார்கள். அவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. எங்கள் ஊர் மாணவியர் பலர் அங்கே படிக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் எந்த தொந்தரவும் இல்லை. எங்கள் பிள்ளைகள் அங்குதான் படிக்கிறார்கள். அந்த மாணவியின் மரணத்திற்கும் மத மாற்றம் காரணம் இல்லை. இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. வீணாக பொய் பேசி வதந்திகளை பரப்ப பார்க்கிறார்கள். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.
அரசியலாக்க வேண்டாம்
இப்போது இவர்களின் அரசியலால் நாங்கள் பீதி அடைந்து உள்ளோம். எங்கள் ஊரே 10 நாட்களாக பீதியாக் இருக்கிறது. தற்போது ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். எங்களை சிலர் மிரட்டுகிறார்கள், எங்கள் மத ஒற்றுமையை சீர்குலைக்க கூடாது. இப்பிரச்சினை தொடர்பாக யாரும் எங்கள் பகுதி வரக்கூடாது அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.