தடுமாறிய கால்கள்.. 500 மீட்டருக்கு முன்னாடி சுருண்ட 'ஐடி ஊழியர்'! டிரையத்லான் போட்டியில் ஷாக்
கோவா: கோவாவில் நடைபெற்ற டிரையத்லான் போட்டியில் பங்கேற்றிருந்த பெங்களூரில் பணியாற்றி வந்த ஐடி ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டி முடிய 500 மீ தொலைவு இருந்த போது அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
டிரையத்லான் போட்டி என்பது உலகின் மிகவும் கடினமான போட்டிகளில் ஒன்றாகும். இதில் நீச்சல், சைக்கிள் பந்தயம் மற்றும் ஓட்டப்பந்தையம் என மூன்று வகையான போட்டிகளும் ஒரே நேரத்தில் நடத்தப்படும். இதில் பங்கேற்க நீண்ட முறையான பயிற்சி அவசியமாகும். மற்ற போட்டிகளை போல இதில் யார் முதலில் வெற்றி பெறுகிறார்கள் என்பதை விட போட்டியை யார் முடிக்கிறார்கள் என்பதுதான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கோவாவில் கடந்த 8ம் தேதியன்று அயர்ன்மேன் 70.3 (IRONMAN 70.3) எனும் பெயரில் டிரையத்லான் போட்டி தொடங்கியது.

இந்த போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் ஒருவராக ராஞ்சியில் பிறந்து வளர்ந்து பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் 26 வயதான காமக்யா சித்தார்த் ஸ்ரீவஸ்தவா எனும் இளைஞரும் பங்கேற்றிருந்தார். இவர் ஏற்கெனவே இதுபோன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்றிருப்பதாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே இவரது பங்கேற்பு குறித்து பரவலாக எதிர்பார்ப்பு மேலெழுந்திருந்தது.
அயரன்மேன் 70.3 டிரையத்லான் போட்டியை பொறுத்த அளவில் முதலில் 1.9 கி.மீ தூரத்தை நீந்தி கடக்க வேண்டும். அதன் பின்னர் 90 கி.மீ தூரத்தை சைக்கிள் மூலமாக கடக்க வேண்டும். இறுதியாக 21.1 கி.மீ தூரம் ஓடி கடக்க வேண்டும். இதில் பங்கேற்றிருந்த ஸ்ரீவஸ்தவா மற்ற வீரர்களை போல தொடர்ந்து முன்னேறி வந்தார். நீச்சல், சைக்கிள் போட்டி என இறுதியாக ஓட்டப்பந்தயத்திற்கு வந்த அவர் இலக்குக்கு 500 மீ தூரம் முன்னர் சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அவரது உறுப்புக்கள் பல செயலிழந்ததால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் கோவாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நிழச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமை டிரையத்லானின் போது இதில் பங்கேற்ற விளையாட்டு வீரர் ஒருவர் உயிரிழந்த செய்தியை பகிர்ந்துகொள்வதில் நாங்கள் வருத்தமடைகிறோம். இவர் ஓட்டப்பந்தையத்தின் முடிவில் 500 மீட்டருக்கு முன்னர் சரிந்து விழுந்தார். அவசர மருத்துவ குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications