பெங்களூரில் ஷாக்.. இஎஸ்ஐ மருத்துவமனையில் 1 வருடம் கழித்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளி சடலங்கள்
பெங்களூர்: கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த 2 நபர்களின் உடல்கள் பெங்களூரில் உள்ள தொழிலாளர் காப்பீடு மருத்துவமனையின் (ESI) பிணவறையில் ஒரு வருடத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொரோனாவிற்கு பலியான இந்த உடல்கள் துர்கா மற்றும் முனிராஜு என அடையாளம் காணப்பட்டுள்ளது. ராஜாஜிநகர் இஎஸ்ஐ மருத்துவமனையில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு சடலங்கள் பிணவறையின் குளிர்பதனக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்துள்ளது.
இந்தியாவில் சட்டென குறைந்த கொரோனா மரணங்கள்- நேற்று 236 பேர் உயிரிழப்பு
கேட்பாரற்ற நிலை
இதற்கிடையில் புதிய பிணவறைக் கட்டிடம் இயங்கத் தொடங்கியதால், இந்த சடலங்களை கேட்பாரில்லாமல் மருத்துவமனை ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதாகவும், மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுத்தப்படுத்தும் ஊழியர்கள்
சில தினங்கள் முன்பு பராமரிப்பு ஊழியர்கள் பழைய பிணவறையை சுத்தம் செய்யச் சென்றபோது, அவர்கள் துர்நாற்றத்தை உணர்ந்தனர், சந்தேகப்பட்டு மருத்துவமனை ஊழியர்களுக்கு தெரிவித்தனர். அவர்கள் பார்த்தபோது இரண்டு உடல்களையும் ப்ரீசரில் வைக்கப்பட்டதை கண்டுபிடித்தனர்.
அடையாளம் தேடுகிறார்கள்
சடலங்களை பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றியுள்ள போலீசார், இறந்தவர்களின் குடும்பத்தினரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த பலரின் குடும்பத்தினர் உடல்களை கொண்டு செல்ல தயங்கியுள்ளனர். எனவே மருத்துவமனைகளில் சடலங்கள் கிடந்துள்ளன. அடுத்தடுத்த மாதங்களில் அதிகமான கோவிட்-19 கேஸ்கள் வந்த காரணத்தால், மருத்துவமனை ஊழியர்கள் பிஸியாகிவிட்டனர். இந்த இரு நபர்களின் சடலங்களை அவர்கள் மறந்தே விட்டனர்.
Recommended Video
குடும்பத்தினரை தேடும் அதிகாரிகள்
இறந்தவர்களின் குடும்பத்தினர் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் அனுமதி கிடைத்ததும் உடல்கள் தகனம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த இருவரும் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், நாங்கள் மருத்துவமனையின் உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கிறோம் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.