ஸ்லீப்பர் பஸ்சில் 20 பேர் கருகி பலி.. கர்நாடகா பஸ் விபத்து எப்படி நடந்தது? தப்பிய டிரைவர் - கிளீனர் சொன்ன ஷாக் தகவல்
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் ஸ்லீப்பர் வசதி கொண்ட தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் 20 பயணிகள் தீயில் கருகி இறந்தனர். இதில் உயிர் பிழைத்த தனியார் பஸ் டிரைவர், கிளீனர் ஆகியோர் விபத்து பற்றிய திடுக்கிட வைக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இருந்து தனியாருக்கு சொந்தமான பஸ் நேற்று இரவு உத்தர பிரதேச மாநிலம் கோகர்ணாவுக்கு புறப்பட்டது. இந்த பஸ் ஸ்லீப்பர் வசதி கொண்டது. பஸ்சில் மொத்தம் 15 பெண்கள், 14 ஆண்கள் என்று மொத்தம் 32 பேர் பயணித்தனர்.

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் தாலுகா கோர்லாத் கிராஸில் தனியாருக்கு சொந்தமான சொகுசு பஸ் இன்று அதிகாலை 3 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். ப்போது தான் துயர சம்பவம் நடந்தது.
கோர்லாத் கிராஸில் பஸ் சென்று கொண்டிருந்தபோது லாரி ஒன்று ஹிரியூரில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலை தடுப்புகளை உடைத்து சாலையின் மறுபக்கம் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது மோதியது.
இதில் பஸ் உடனடியாக தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 20 பேர் பலியாகினர். மேலும் பலர் தீக்காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் லாரி டிரைவர், கிளீனர் ஆகியோரும் பலியாகி உள்ளனர். இருந்தாலும் அதிர்ஷ்டவசமாக பஸ் டிரைவர், கிளீனர் உயிர் தப்பி உள்ளனர்.
ஆனாலும் பஸ் டிரைவர், கிளீனர் ஆகியோர் காயமடைந்துள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சையில் .ள்னர். இந்நிலையில் தான் பஸ் டிரைவர் ரபீக் விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது பற்றி கண்ணீருடன் கூறியதாவது: ‛‛சாலையில் எங்களின் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி எதிரே வந்து கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை தாண்டி வந்து மோதியது. லாரி அதிவேகத்தில் வந்தது.
அந்த சமயத்தில் நான் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் தான் பஸ்சை ஓட்டினேன். பஸ்சுக்கு முன்பு லாரி வந்ததால் நான் அதனை கவனித்தேன். இதனால் பஸ்சின் வேகத்தை குறைத்து விபத்தில் சிக்காமல் இருக்க முயற்சித்தேன்.. ஆனாலும் என்னால் முடியவில்லை. பஸ்சில் லாரி மோதியது மட்டும் தான் எனக்கு தெரியும். அதன்பிறகு என்ன நடந்தது? என்பது எனக்கு தெரியவில்லை. எப்படி நான் உயிர் பிழைத்தேன் என்பதும் தெரியவில்லை'' என்றார்.
அதேபோல் பஸ் கிளீனர் முகமது சாதிக் கூறுகையில், ‛‛விபத்து நடந்தபோது நான் பஸ்சின் முன்புறம் இருந்தேன். நாங்கள் பஸ்சின் வேகத்தை குறைத்து விபத்தை தடுக்கமுயன்றோம். ஆனால் முடியவில்லை. எங்களின் பஸ் அருகே சென்ற இன்னொரு வாகனத்தின் மீதும் மோதியது. அந்த வாகனம் என்னவென்று தெரியவில்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications