கடத்தல்.. மது.. பாலியல் வன்கொடுமை.. இன்ஸ்டா நண்பரால் சிதைந்த கர்நாடகா இளம்பெண்
பெங்களூர்: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர், 24 வயது பெண்ணை கடத்தி, போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த குரூரம் நடந்திருக்கிறது.
கர்நாடகா மாநிலம் கர்கலா பகுதியைச் சேர்ந்தவர் 24 வயது பெண். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த 34 வயதான அல்தாப் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகியுள்ளார். இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். அதன்படி அல்தாப், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் பணியிடத்துக்கு சென்ற அல்தாப், திடீரென்று தன்னுடைய காரில் அந்தப் பெண்ணை கடத்தி சென்றுள்ளார்.

தொடர்ந்து அங்கிருந்து ஆள் நடமாட்டம் இல்லாத புறநகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அதிர்ச்சியடைந்த பெண் தப்பிக்க வழியில்லாமல் தவித்துள்ளார். அங்கு மது அருந்த சொல்லி வற்புறுத்தியுள்ளார். அவர் மறுத்தப்போதும் கேட்காமல் வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்துள்ளனர். அதில் அல்தாப் போதை மருந்து கலந்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொமை செய்து தாக்குதலும் நடத்தியுள்ளார்.
கொடுமை அதனுடன் நிற்கவில்லை. சிறிது நேரத்தில் அல்தாபின் நண்பர் ரிசர்ட் என்பவரும் இணைந்து அந்தப் பெண்ணை துன்புறுத்தியுள்ளார். பிறகு அந்தப் பெண்ணை வீட்டில் இறக்கி விட்டுள்ளனர்.மகளின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸ் அல்தாப் மற்றும் ரிச்சர்ட் கர்டசா ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் இரண்டு பேரின் வாகனங்களையும் போலீஸ் பறிமுதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து உடுப்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண் மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறோம். இதை நீதிமன்றத்தில் சமர்பித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் கர்நாடகாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா அரசியல் வட்டாரத்திலும் இது விவாதமாகியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, "கர்நாடகாவில் 'லவ் ஜிகாத்' என்ற பெயரில் இந்து பெண்களை குறிவைப்பது அதிகரித்து வருகிறது. இனியும் வேடிக்கை பார்க்காமல் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம்." என்று கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு பேரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கும் பொதுமக்கள் சமூகவலைதளங்களில் பழகுபவர்களை நம்பி செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். கொல்கத்தா பெண் மருத்துவரின் பாலியல் கொலை அதிர்ச்சியில் இருந்தே நாடு மீளவில்லை. அதற்குள் பெண்களுக்கு எதிராக அடுத்தடுத்து நடக்கும் பாலியல் வன்முறைகள் பயத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications