பண்ணையில் காதல் ஜோடி..திருமணம் செய்யக்கூறிய காதலிக்கு நேர்ந்த கதி.. 6 மாதம் கழித்து சிக்கிய காதலன்
பெங்களூர்: கர்நாடகாவில் பண்ணை வீட்டுக்கு காதலியை அழைத்து சென்ற காதலன் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் துப்பட்டாவை வைத்து அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தார். அதன்பிறகு உடலை புதைத்த காதலன் கொலை செய்ததை வெளிகாட்டாமல் நாடகமாடிய நிலையில் 6 மாதத்துக்கு பிறகு போலீசாரிடம் சிக்கி உள்ளான். அவன் எப்படி சிக்கினான்? என்பது பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டம் நாராயணபுரா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் ஹிரேமட் (வயது 28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மதுஸ்ரீ அங்கடி என்ற 26 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்தனர். அடிக்கடி இருவரும் வெளியே காதல் ஜோடிகளாக வலம் வந்தனர்.

இந்நிலையில் தான் சதீஷ் - மதுஸ்ரீயின் காதல் விவகாரம் மதுஸ்ரீயின் குடும்பத்துக்கு தெரியவந்தது. அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மதுஸ்ரீயை வீட்டில் இருந்து கதக் டவுனில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி உறவினர் வீட்டில் இருந்து வெளியே சென்ற மதுஸ்ரீ மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் மாயமானார். இதையடுத்து அவரை உறவினர்கள், குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து சுமார் ஒரு மாதத்துக்கு பின் குடும்பத்தினர் பெட்டகேரி போலீசில் புகார் செய்தனர். கடந்த ஜனவரி 12ம் தேதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
சந்தேகத்தின் பேரில் போலீசார் சதீஷை அழைத்து விசாரித்தனர். விசாரணையின்போது சதீஷ் சம்பவத்தன்று மதுஸ்ரீயை சந்தித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் மதுஸ்ரீயை அன்றைய தினம் கதக் புறநகரில் ‛டிராப்' செய்துவிட்டு சென்றுவிட்டேன். அதன்பிறகு என்ன நடந்தது? மதுஸ்ரீ எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை என்று கூறினார்.
போலீசார் துருவி துருவி கேட்டாலும் சதீஷ் இந்த தகவலை மட்டுமே கூறி வந்தார். ஆனாலும் போலீசாருக்கு சதீஷ் மீதான சந்தேகம் இருந்து கொண்டே தான் இருந்தது. இதனால் போலீசார் சதீசின் நடவடிக்கையை கண்காணித்து வந்தனர். இந்த வேளையில் தான் போலீசாருக்கு மதுஸ்ரீயின் செல்போன் லோகேஷன் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சதீஷை அழைத்த விசாரித்தனர். அப்போது அவர் மதுஸ்ரீயை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் ஓடை அருகே புதைக்கப்பட்ட இடத்தை போலீசாரிடம் அவர் காண்பித்தார். அந்த இடத்தை தோண்டிப்பார்த்தபோது எலும்பு கூடுகள் கிடைத்தது. மண்டை ஓடு கிடைக்கவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மேலும் சதீஷை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியடைய வைத்தது. அதாவது சம்பவத்தன்று சதீஷ், மதுஸ்ரீயை அவரது உறவினர் வீட்டில் இருந்து நாராயணபுரா அருகே உள்ள பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மதுஸ்ரீ தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சதீஷிடம் கூறியுள்ளார். சதீஷ் திருமணத்தை இன்னும் சில காலம் கழித்து செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் மதுஸ்ரீ கேட்கவில்லை. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை வந்துள்ளது. இந்த பிரச்சனை முற்றவே ஆத்திரமடைந்த சதீஷ், மதுஸ்ரீயை அவரது துப்பட்டாவை வைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். அதன்பிறகு கொலையை மறைக்க அவரது உடலை அருகே உள்ள ஓடையின் அருகே புதைத்து நாடகமாடினேன் என்று சதீஷ் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். கைதான சதீஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications