மூலப் பத்திரமின்றி சொத்து பதியலாம்! வில்லங்க சான்றிதழில் சர்வே எண் கட்டாயம்! தீர்ப்பை வரவேற்ற பெயிரா
சென்னை: தமிழகத்தில் மூலப் பத்திரம் இல்லாதபோது ஆவணப் பதிவுகளைச் செய்ய இயலாத வகையில் உள்ள பதிவுச் சட்டம் பிரிவு 34-C நடைமுறையை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்ல, வில்லங்கச் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்போருக்கு சர்வே எண் மற்றும் கதவு எண் ஆகிய விபரங்களுடன் அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த தீர்ப்பினை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
மூலப் பத்திரம் இல்லாதபோது ஆவணப் பதிவுகளைச் செய்ய இயலாத வகையில் உள்ள 34C என்ற பத்திரப் பதிவு சட்டத் திருத்தத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வில்லங்கச் சான்றிதழ் விண்ணப்பித்தோருக்கு சர்வே எண், கதவு எண் ஆகிய விபரங்களுடன் அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் N. சதீஷ்குமார் மற்றும் M. ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.

பெயிரா வரவேற்று மகிழ்ச்சி
நிர்வாக விளக்கங்களால் உருவான குழப்பங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொண்ட நிர்வாகத் தாமதங்கள் ஆகியவற்றைச் சரிசெய்யும் முக்கியமான நீதித்துறை நடவடிக்கையாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) இந்த தீர்ப்பை மனதார வரவேற்றுள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அக்கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைப்படி, FAIRA தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர் திரு. பெயிரா பாண்டி மூலம் இந்த வழக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
தனிநபர் சொத்து உரிமைப் பாதுகாப்பின் அடிப்படையிலும், பதிவு அலுவலகங்களில் வெளிப்படையான, சட்டத்திற்கு உட்பட்ட நடைமுறை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த சட்டப் போராட்டம் நடத்தப்பட்டதாக பெயிரா தெரிவித்துள்ளது.
மூலப் பத்திரம் - சொத்து பதிவு
பிரிவு 34-C தொடர்பான நடைமுறையால், அசல் ஆவணங்களை மட்டும் பெற்றுக்கொண்டு, சட்டபூர்வமான அடமானக் கடன் பத்திரப் பதிவு செய்யாமல், சொத்து உரிமையாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் பணம் வழங்கும் செயல்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டது.
இதனால், உரிய அடமானக் கடன் பத்திரம் பதிவு செய்யப்படாமல் இருப்பது சொத்து உரிமையாளர்களின் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பதிவுத்துறைக்கு கிடைக்க வேண்டிய முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டண வருவாய் இழப்பையும் ஏற்படுத்தியது, இந்த தீர்ப்பின் மூலம் இத்தகைய சிக்கல்கள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசல் சொத்து ஆவணங்கள்
அசல் சொத்து ஆவணங்களை தவறான நோக்கத்துடன் கைப்பற்றுதல், அதன் மூலம் உரிமையாளர்களை அச்சுறுத்துதல், சட்டவிரோதமான பஞ்சாயத்துகள் நடத்துதல் போன்ற செயல்களுக்கு இடமளிக்காத வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றத்தில் விரிவான சட்ட வாதங்களை முன்வைத்த மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் மற்றும் அஜ்மல் அசோசியேட்ஸ் சட்ட அணியினருக்கு FAIRA சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை, தமிழக அரசு மற்றும் பதிவுத்துறை எவ்விதத்திலும் கவுரவப் பிரச்சினையாகக் கருதாமல், மேல்முறையீடு செய்யக் கூடாது என பெயிரா பணிவுடன் வேண்டுகோள் விடுத்துள்ளது. அது மட்டுமல்ல, நீதிமன்றத் தீர்ப்பின் உண்மையான நோக்கத்திற்கேற்ப, பதிவுத்துறையின் சட்டப் பிரிவு தெளிவான வழிகாட்டுதல்களைத் தயாரித்து, உடனடியாக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி ஒரே மாதிரியான நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications