முளைச்சு மூனு இலை கூட விடல.. பண்ற சேட்டைய பார்த்தீங்களா! பெங்களூரில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
பெங்களூர்: பெங்களூரில் சாலையில் இளம்பெண் ஒருவரை பைக்கில் மூன்று இளைஞர்கள் துரத்தி சென்று சீண்டலில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
பெங்களூருவின் எஸ்.ஜி. பாளையா பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த 25ம் தேதி இந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் மூன்று இளைஞர்கள், பைக்கில் சென்ற இளம் பெண்ணை துரத்தி சென்று தொல்லை தந்திருக்கின்றனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொரு வாகன ஓட்டியான அபினவ் வாசுதேவன் என்பவர், சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார். இதனால் பயந்த இளைஞர்கள் மூவரும், அந்த இடத்திலிருந்து துண்டை காணோம், துணியை காணோம என்று தெறித்து ஓடியிருக்கிறார்கள்.
இது குறித்து அபினவ் வாசுதேவன் தனது X பதிவில், "ஒரு பெண் பல கிலோமீட்டர்களுக்குச் சாலை நெடுகிலும் இளைஞர் குழுவால் துன்புறுத்தப்படுவதை பார்த்தேன். அப்போது மணி இரவு 10 மணி கூட இருக்காது. இந்த சம்பவத்தை ஆதாரமாக வீடியோவாக பதவு செய்தேன். நான் தலையிட்டதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோவையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட ரோஷன் (19), அயன் (19), ரியான் கான் (18) ஆகிய மூவரையும் காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இவர்களின் இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
தனிமனித ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. ஆனால், இளம் தலைமுறையினரிடம் இது மிகவும் குறைவானதாகவே இருக்கிறது என்பதை இது போன்ற சம்பவங்கள் மேலும் மேலும் உறுதி செய்கின்றன என்று பலரும் கூறியுள்ளனர்.
அதேபோல, மறுபுறம், பெங்களூருவில் மெட்ரோ ரயிலில் நடந்த மற்றொரு அச்சுறுத்தல் சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 23ம் தேதியன்று 46 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், சகப் பெண் பயணியிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாகப் புகார் எழுந்தது.
ஸ்ரீ சத்யசாய் மருத்துவமனை நிலையத்தில் மெட்ரோ ரயிலில் ஏறிய அப்பெண் அமர்ந்திருந்தார். சில நிறுத்தங்களுக்குப் பிறகு, அந்த நபர் தனது அருகில் வந்து அநாகரீகமான உடல் அசைவுகளைச் செய்யத் தொடங்கியதாகவும், இதனால் தனக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டதாகவும் அப்பெண் தெரிவித்தார்.
தான் சற்றே நகர்ந்து அமர்ந்த பின்னரும், அந்த நபர் தன்னை நோக்கி தொடர்ந்து நகர்ந்து, மன உளைச்சலை அதிகப்படுத்தியதாக அப்பெண் கூறினார். அப்பெண் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும், இறங்குவதற்கு முன் அந்த நபரை நோக்கி கேள்வி எழுப்பி, அந்நபரின் முகத்தில் அறைந்திருக்கிறார். இந்த சம்பவம் முழுவதையும் அப்பெண் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். பின்னர், இது குறித்து போலீசில் புகார் அளித்திருக்கிறார். ஆனால், போலீசார் அந்த நபரிடம் மென்மையாக நடந்ததாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications