ஆபரேஷன் லோட்டஸ் அச்சம்.. கர்நாடக காங். எம்எல்ஏக்கள் கூண்டோடு ரிசார்ட்டில் தஞ்சம்
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசுக்குள் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதற்கு உச்சம் வைத்தாற்போல, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் கடந்த சில நாட்களாக மாயமாகியுள்ளனர். இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அனைவரும், ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில், 7 மாதங்கள் முன்பு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சியை பிடிக்க போதிய பலம் இல்லாததால், எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகவே கவிழ்ந்தது.
இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. மஜதவை சேர்ந்த குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

சுயேச்சைகள் வாபஸ்
இந்த நிலையில், ஆட்சிக்கு அளித்த ஆதரவை இரு சுயேச்சை எம்எல்ஏக்கள் கடந்த வாரம் திடீரென வாபஸ் பெற்றனர். இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலரும் எதிர்முகாமுக்கு தாவப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து பாஜக எம்எல்ஏக்களை வளைக்க காங்கிரஸ், மஜத தலைவர்கள் முயன்றனர். எனவே பாஜக எம்எல்ஏக்கள் ஹரியானாவிலுள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். இப்படி அமளி துமளியாக போய்க்கொண்டுள்ளது கர்நாடக அரசியல்.

எம்எல்ஏக்கள் மிஸ்சிங்
இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை பத்திரப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அக்கட்சியின் சட்டசபை குழு தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தார். யாரெல்லாம் இந்த கூட்டத்தில் பங்கேற்க வரவில்லையோ, அவர்கள் கட்சியை விட்டு தூக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்திருந்தார். ஆனால், 4 எம்எல்ஏக்கள் மட்டும் மிஸ்சிங்.

மும்பை ஹோட்டல்
ஆட்சியை கவிழ்க்கும் வகையில் செயல்படும் எம்எல்ஏக்கள் என இம்மூவரையும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சந்தேகிக்கிறார்கள். அந்த நால்வரும் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுடன், 2 சுயேச்சைகளும் தங்கியுள்ளனராம். பாஜக எம்.பி. சஞ்சய் பாட்டில் இன்று காலை ஹோட்டலில் இந்த ஆறு பேரையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது, காங்கிரசுக்கு மேலும் எரிச்சலை கிளப்பியுள்ளது.

முக்கிய தலைவர்
ரமேஷ் ஜாரகிகோலி, மகேஷ் குமடால்லி மற்றும் உமேஷ் ஜாதவ் உட்பட நால்வரும்தான் மும்பை ஓட்டலில் தங்கியுள்ள காங். எம்எல்ஏக்கள் என கூறப்படுகிறது. இதில், ரமேஷ் ஜாரகிகோலி வட கர்நாடகாவில் பிரபலமான ஒரு தலைவராக விளங்கி வருவது காங்கிரசுக்கு மேலும் கிலியூட்டக்கூடிய செய்தி. ஏனெனில் இவர் மேலும் பல எம்எல்ஏக்களை தன்பக்கம் இழுக்கும் அளவுக்கு வலிமையானவராகவும் உள்ளார்.
|
பெரும்பான்மை பலம்
இதனிடையே, எம்எல்ஏக்களுடனான ஆலோசனைக்கு பிறகு சித்தராமையா கூறியதாவது: பணத்தை எடுத்துக்கொண்டு வாங்குங்கள் என்று நீட்டிக்கொண்டிருக்கிறார்கள் பாஜக தலைவர்கள். அவர்களிடமிருந்து ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக, நாங்கள் ரிசார்ட் செல்கிறோம். இன்றைய மீட்டிங்கில் 77 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருமே ரிசார்ட் செல்ல முடிவு செய்துள்ளோம். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications