துண்டு துண்டாகும் பெங்களூர்.. செப்., 2ம் தேதி முதல் 5 மாநகராட்சி உதயம்.. தேர்தல் எப்போது தெரியுமா?
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சியை 5 ஆக பிரிக்க வசதியாக ‛கிரேட்டர் பெங்களூர் கவர்னன்ஸ்(திருத்தம்) மசோதா 2025' கர்நாடகா சட்டபையில் நிறைவேற்றப்பட்டது. இதனால் வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் பிபிஎம்பி எனும் பெங்களூர் மாநகராட்சிக்கு பதில் 5 புதிய மாநகராட்சிகள் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர 5 மாநகராட்சிக்கான தேர்தல் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் ஆண்டுதோறும் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பெங்களூர் நகரில் வசித்து வருகின்றனர். பெங்களூர் நகரில் மட்டும் 28 சட்டசபை தொகுதிகள், 3 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.

இருப்பினும் பெங்களூரில் ஒரேயொரு மாநகராட்சி மட்டுமே செயல்பட்டு வந்தது. பிபிஎம்பி என அழைக்கப்பட்ட அந்த மாநகராட்சியில் மொத்தம் 243 வார்டுகள் இருந்தன.
இந்நிலையில் தான் பெங்களூர் மாநகராட்சியை 5 ஆக பிரிக்க காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். இதில் டிகே சிவக்குமார் வசம் தான் பெங்களூர் நகர மேம்பாட்டு துறை உள்ளது. டிகே சிவக்குமார் பெங்களூர் மாநகராட்சியை 5 ஆக பிரிப்பதில் உறுதியாக இருந்தார்.
இதையடுத்து பெங்களூர் மாநகராட்சி தனித்தனியே பிரிக்க கர்நாடகா சட்டசபையில் ‛பெருநகர பெங்களூரு ஆணைய மசோதா 2025 (Greater Bengaluru Governance (Amendment) Bill 2025)கர்நாடக சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் சட்டசபை, மேல்சபையில் காங்கிரஸ் பெரும்பான்மையில் உள்ளதால் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்பிறகு மசோதா ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கினார். இதன்மூலம் பெங்களூரில் நடைமுறையில் இருந்த ஒரு மாநகராட்சிக்கு பதில் இனி 5 மாநகராட்சி செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 2ம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றைய தினமே இது அமலுக்கு வரவுள்ளது.
இந்த மாநகராட்சிக்கு தனித்தனி பெயர்கள் சூட்டப்பட உள்ளது. அதன்படி பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு கிழக்கு, பெங்களூரு மேற்கு, பெங்களூரு சென்ட்ரல் என்று மாநகராட்சிகளின் பெயர்கள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு மாநகராட்சிக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆணையராக செயல்பட உள்ளார். ஒரு மாநகராட்சியின் கீழ் 2 மண்டலங்கள் செயல்படும். ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தேர்வு செய்யப்படும் மேயர்களின் பதவிக்காலம் 30 மாதங்கள் ஆகும்.
மேலும் ஒவ்வொரு மாநகராட்சியிலும் 100 முதல் 130 வார்டுகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி பார்த்தால் 5 மாநகராட்சிக்கும் சேர்த்து அதிகபட்சமாக 600 வார்டுகள் உருவாக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தனிதனி மேயர்கள், அதிகாரிகள், வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் மக்களின் குறைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு உள்ளது தற்போது பெங்களூர் மாநகராட்சி காலியாக உள்ளது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications