பெங்களூரில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. டெல்லியும் தப்பவில்லை.. பீதி
பெங்களூர்: தலைநகர் டெல்லி மற்றும் பெங்களூரில் செயல்பட்டு வரும் 60 பள்ளிகளுக்கு இன்று ஒரே நாளில் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளின் அனைத்து இடங்களில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபகாலமாக பள்ளிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் இன்று திடீரென்று தலைநகர் டெல்லி மற்றும் பெங்களூரில் உள்ள 60 பள்ளிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 20 பள்ளிகளுக்கும், பெங்களூரில் 40 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

அந்த இ-மெயில் , ‛‛ ஹலோ.. பள்ளி வகுப்பறைகளுக்குள் பல வெடிபொருட்களை(trinitrotoluene) வைத்துள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே நான் இதனை எழுதுகிறேன். வெடிபொருட்கள் கருப்பு பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. உங்கள் ஒவ்வொருவரையும் இந்த உலகத்தில் இருந்து அழித்துவிடுவேன். ஒரு ஆன்மா கூட உயிர் பிழைக்காது அதுதொடர்பான செய்திகளைப் பார்க்கும்போது நான் மகிழ்ச்சியுடன் சிரிப்பேன்.
அதன்பிறகு தற்கொலை செய்து கொள்வேன். மனநல மருந்துகள் யாருக்கும் உதவாது. அந்த மருந்துகளை தரும் டாக்டர்கள் பக்கவிளைவு பற்றி தெரிவிப்பது இல்லை. இதனால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை போலவே நீங்கள் பாதிக்கப்பட வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.
இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பள்ளியின் அனைத்து இடங்களிலும் போலீசார், தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டை அகற்றும் நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் பள்ளிகளில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இ-மெயிலில் வந்த மிரட்டல் புரளி என்பது உறுதியானது. இதனால் மாணவ - மாணவிகள், ஆசிரியர்கள், போலீசார் என அனைவரும் நிம்மதியடைந்தனர்.
பெங்களூரை எடுத்து கொண்டால் ஆர்ஆர் நகர் மற்றும் கெங்கேரி உள்பட பல இடங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. டெல்லியை எடுத்து கொண்டால் ரோகினி பகுதியில் உள்ள அபினவ் பப்ளிக் பள்ளி, பசியம் விஹாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பள்ளி உள்பட 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்லியை எடுத்து கொண்டால் தொடர்ந்து இதுபோன்று இ-மெயிலில் மிரட்டல் என்பது விடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் இது 4வது வெடிகுண்டு மிரட்டலாகும். இதற்கு முன்பு இந்த வாரத்தில் டெல்லியில் 10 பள்ளிகள், ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications