வாக்குக்காக வாங்கிய இலவச குக்கர் வெடித்துச் சிதறியது.. வெந்துபோன பெண் முகம்.. பீதியில் மக்கள்
கர்நாடகா மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓட்டுக்காக இலவசமாக கொடுத்த குக்கர் திடீரென வெடித்து சிதறியது.
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓட்டுக்காக இலவசமாக கொடுத்த குக்கர் திடீரென வெடித்து சிதறியது. திடீரென குக்கர் வெடித்துச் சிதறியதால் ஒரு பெண்ணின் முகம் கை கால் வெந்துபோனது. இதனால் குக்கரை இலவசமாக பெற்ற மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மற்றொரு எதிர்க்கட்சியான ஜனதா தளம் (எஸ்டீ ஆகியவை இப்போதே பிரச்சாரத்தை துவக்கி உள்ளன.
மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சி கட்டிலில் ஏறிவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக உள்ளன. தற்போது அம்மாநில அரசியலில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது. ஜனதா தளம் (எஸ்) கட்சி மட்டும் தற்போது 93 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியும் விட்டது. காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இன்னமும் வேட்பாளர்களை தேர்வு செய்யவில்லை. வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பணியில் தீவிரமாக இறங்கி உள்ளன.

சமைத்தனர்
இந்நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகளின் பரிசு பொருட்கள் விநியோகமும் தீவிரமாக நடந்து வருகிறது. பெங்களூரு சோவேஸ்வரா காலணி பகுதியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சமையல் குக்கர்களை இலவசமாக வழங்கினர். இதனை போட்டி போட்டு பொதுமக்களும் வாங்கினார்கள்.

வெந்துபோன முகம்
இதனிடையே இலவசமாக வந்த குக்கரில் சமைத்துக் கொண்டிருந்த போது, திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் பெண்ணுக்கு கை, கழுத்து, முகம் உள்ளிட்டவற்றில் தீக்காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. குக்கர் திடீரென வெடித்து சிதறியதால், இலவச குக்கர் பெற்ற மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

குக்கர் அரசியல்
இதனிடையே கர்நாடகாவில் இலவச குக்கர் வழங்குவது அதிகமாக உள்ளது. குக்கர் அரசியல் அங்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. குக்கர் மட்டுமின்றி, எல்இடி டிவி, வேஷ்டி, சேலைகளும் வாக்காளர்களுக்கு தரப்படுகிறது. இலவசங்களை கொடுத்து ஓட்டு பெறும் அரசியல் கட்சிகளிடம் நியாயத்தை, ஊழலற்ற நிர்வாகத்தையும் எதிர்பார்ப்பது எப்படி சாத்தியம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

மக்கள் திகைப்பு
அரசியல் கட்சிகளும் இலவசங்கள் மூலம் வாக்குகளை பெற்றால் போதும் என்ற மனநிலையுடன் தேர்தலை அணுகுவதால், வறுமையில் உள்ள மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதே இல்லை என்று வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். தமிழ்நாட்டில் ஈரோட்டில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கும் இலவசமாக பல்வேறு பொருட்கள் விநியோக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள மக்களின் வழங்கப்படும் சலுகைகளை பார்த்து மற்ற தொகுதி மக்கள் வாயைடத்து போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications