அண்ணனுக்கு கல்லீரல் பாதிப்பு.. "தங்கச்சி நான் இருக்கேன்".. வாழவைத்த அன்பு தங்கை.. நெகிழ்ச்சி சம்பவம்
அண்ணனுக்கு யாரும் கல்லீரல் தானமளிக்க முன்வராத நிலையில் தங்கை தானாக முன்வந்து 68% கல்லீரலை தானமளித்துள்ளார்
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது அண்ணனுக்கு கல்லீரல் தானம் அளித்து காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் குர்தீப் கவுர் எனும் பெண்மணி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருடைய அண்ணன் ஜஸ்வந்த் சிங் துபாயில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டதில் உடல் நலத்தில் எந்த பிரச்னையும் இல்லையென்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் உடல்நலம் தொடர்ந்து மோசமடைந்து வந்துள்ளது.
அது கொரோனா தொற்று பரவிய காலகட்டம் என்பதால் இங்கிருந்து உறவினர்களால் ஜஸ்வந்த் சிங்கை சென்று பார்க்க முடியவில்லை. மறுபுறம் நாளுக்கு நாள் இவரது உடல்நலம் மோசமடைந்து கொண்டே வந்திருக்கிறது. எனவே உறவினர்கள் இவரை இவர்களது சொந்த ஊரான பஞ்சாபுக்கு கொண்டுவந்துள்ளனர். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் இவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை
ஆனாலும் சிகிச்சை உடல்நலத்தை தேற்றவில்லை. எனவே, மருத்துவர்கள் ஜஸ்வந்த் சிங்கின் உறவினர்களை அழைத்து, ஜஸ்வந்த் சிங்கிற்கு உடல்நலம் சீராகவில்லை. எனவே அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். எனவே கல்லீரல் டோனர்களை தேடியுள்ளனர். எங்கு தேடியும் கல்லீரல் கிடைக்காததால் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர். அப்போதுதான் மருத்துவர்கள் சில தகவல்களை குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். அதாவது இவருடைய உருவத்தையும், இரத்த வகையையும் கொண்டிருக்கும் யார் வேண்டுமானாலும் கல்லீரல் தானம் கொடுக்கலாம்.

தங்கை
உங்கள் குடும்பத்தின் உறுப்பினருக்கு உங்களில் யாரேனும் கூட கல்லீரல் தானம் வழங்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் இவர்கள் குடும்பத்தில் யாருக்கும் இவருடைய ரத்த வகை பொருந்தவில்லை. அப்படி பொருந்தினாலும் இவருடைய உடல் அமைப்பை ஏற்றார் போல யாரும் இருக்கவில்லை. அப்போதுதான் குடும்பத்தினருக்கு பெங்களூரில் வசித்து வரும் குர்தீப் கவுர் நினைவுக்கு வந்திருக்கிறார். இவரை நேரில் அழைத்து விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள். முதலில் தயங்கிய கவுர், பின்னர் ஒப்புக்கொண்டார். கவுருக்கு 40 வயதாகிறது. இவருக்கு 16 வயதில் ஒரு குழந்தையும், 6 வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றனர்.

தானம்
பெரும்பாலும் 50 சதவிகிதத்திற்கு மேல் கல்லீரல் செயலிழந்தவர்களுக்குதான் கல்லீரல் மாற்று அறுவை சிகிக்சை செய்யப்படும். அப்படியெனில் இதனை தானம் கொடுப்பவரிடமிருந்தும் 50%க்கும் அதிகமான கல்லீரல் பெறப்படும். ஆனால் இவ்வாறு தானம் அளிப்பவர்களின் கல்லீரல் வேகமாக வளர்ந்துவிடும் என்பதால் கவுர் தானமளிக்க தைரியமாக முன் வந்திருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 6-10 மணி நேரம் வரை இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தங்கை கவுர் கூறுகையில்,

அறுவை சிகிச்சை
"நான் இவ்வாறு கல்லீரல் கொடுப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் என்னை தவிர வேறும் கிடைக்கவில்லை என்பதால் நானே கொடுக்க முன்வந்தேன். இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் எனக்கு பழையபடி கல்லீரல் வளர 6-8 வாரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். தற்போது 6 வாரங்கள் ஆகிவிட்டன. என்னால் எல்லா வேலையும் இயல்பாக செய்ய முடிகிறது. எனது கல்லீரலிலிருந்து சுமார் 68% வரை நான் தானமளித்துள்ளேன்" என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் கவுரின் குடும்பத்தினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications