எலக்ட்ரானிக் சிட்டி பாலத்தில் பைக்கால் வினை! கார், பைக் மீது ஆம்புலன்ஸ் மோதல்! யூலு டூவீலருக்கு தடை?
பெங்களூர்: பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் ஆம்புலன்சுக்கு வழிவிட முயன்ற கார் யூலு பைக் மீது மோதியது. மேலும் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி சங்கிலி தொடர் விபத்து நடந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ள நிலையில் எலக்ட்ரானிக் சிட்டியில் பைக் செல்ல அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கை வலுக்க தொடங்கி உள்ளது.
பெங்களூரில் உள்ள முக்கியமான இடங்களில் எலக்ட்ரானிக் சிட்டியும் ஒன்று. ஓசூர் - பெங்களூர் ரோட்டில் எலக்ட்ரானிக் சிட்டி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்பட பிற பிரபல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் எலக்ட்ரானிக் சிட்டியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.

இதனால் வாகனங்கள் வேகமாக சென்று வர எலக்ட்ரானிக் சிட்டியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மேம்பாலத்தில் வேகமாக பயணித்து வருகின்றனர். இந்த பாலத்தில் டூவீலர்கள், கார்கள், பஸ்கள் என அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதி உள்ளது.
இத்தகைய சூழலில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் நேற்று மாலை 5.36 மணியளவில் ஒருவர் யூலு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மேம்பாலத்தின் ஓரத்தில் யூலு பைக்கை நிறுத்திவிட்டு அதில் அமர்ந்திருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு பின்னால் 2 வெள்ளை நிறம் மற்றும் கருப்பு நிறத்தில் 2 கார்கள், ஆம்புலன்ஸ் ஆகியவை வேகமாக வந்து கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் வெள்ளை நிற காரை முந்திய நிலையில் கருப்பு நிற காரை முந்தி செல்ல மேம்பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்றது. அப்போது மேம்பாலத்தில் சென்ற கருப்பு நிற கார் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட முயன்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தின் ஓரம் யூலு பைக்கில் நின்றவர் மீது மோதியது. இதில் மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் யூலு பைக் மோதி சேதமடைந்தது.
மேலும் பின்னால் வேகமாக வந்த வாகனங்களும் மோதிக்கொண்டன. மொத்தம் 4 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் யூலு பைக் முற்றிலுமாக சேதமடைந்தது. அதில் சென்றவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் நேற்று சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் சிலர் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பைக், ஆட்டோக்களை அதில் செல்ல அனுமதிக்க கூடாது என பெங்களூர் மாநகர போலீசாருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் இந்த விபத்தில் சிக்கிய யூலு பைக் பற்றி பார்த்தமேயானால் அது வாடகை பைக் ஆகும். இது சைக்கிள் போன்று தான் இருக்கும். பெங்களூர் உள்பட பல பெரிய நகரங்களில் இந்த யூலு பைக் சேவை என்பது உள்ளது. ஸ்கேன் செய்து நமக்கு தேவையான யூலு பைக்கை எடுத்து ஓட்டலாம். இதன் வேகம் என்பது குறைவாக தான் இருக்கும். ஆனாலும் பெங்களூரில் ஒரு நாளில் நகரின் பல்வேறு இடங்களுக்கு ஆட்டோ, வாடகை காரில் சென்றால் பணம் அதிகம் செலவாகும். பஸ்களில் சென்றால் அதிக நேரம் எடுக்கும். இதனால் குறித்த நேரத்தில் பல இடங்களுக்கு செல்ல முடியாது.
ஆனால் யூலு பைக்கை பயன்படுத்தும்போது வாடகை குறைவதுடன், நாம் நினைத்து இடங்களுக்கு உடனே புறப்பட்டு செல்லவும் முடியும். இதனால் பலரும் யூலு பைக்கை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட முயன்ற கார் யூலு பைக் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications