பஸ்ஸும் ஓடல.. மெடிக்கல் ஷாப்பும் இல்லை.. ஜூரம் வந்த மகளை.. 8 கி.மீ. தோளில் சுமந்து நடந்து வந்த தந்தை
8 கிமீ தூரத்துக்கு காய்ச்சல் பாதித்த மகளை தோளில் சுமந்து வந்தார் தந்தை
பெங்களூரு: பஸ், கார் எதுவுமே ஓடாததால், ஜூரத்தால் அவதிப்பட்ட மகளை, 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு தோளிலேயே சுமந்து வந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளார் தந்தை..!
கர்நாடகத்தில் அளவுக்கு அதிகமாக தொற்று பரவி வருகிறது.. இதனால், அம்மாநில அரசு பல்வேறு தடுப்பு முயற்சிகளில் இறங்கி வருகிறது.
முழு லாக்டவுனும் அங்கும் போடப்பட்டுள்ளது.. எனவே, அரசு பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் என எதுவுமே ஓடவில்லை.
தேவை
அவசர தேவைக்கு பொதுமக்கள் வெளியே செல்லலாம் என்று அனுமதி இருந்தாலும், இதே அவசர தேவைக்கு போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்படும் நிலைமை உள்ளது.. பக்கத்திலேயே இருக்கும் மெடிக்கல் ஷாப், காய்கறிகடைகள் போன்றவற்றுக்கு சென்று தேவையானதை மட்டுமே பொதுமக்களால் வாங்கி கொள்ள முடிகிறது.
யாதகிரி
ஆனால், அவசரத்துக்கு ஒரு ஆஸ்பத்திரி போக வேண்டும் என்றால் கூட வாகன வசதி இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.. அந்தவகையில், யாதகிரி மாவட்டத்தில் 3 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் திறக்கவும் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.. யாராவது பைக்கில் வந்தாலும், தேவையில்லாமல் ஊர் சுற்றுகிறார்கள் என்று நினைத்து, வண்டியையும் போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
காய்ச்சல்
இந்த நிலையில், அதே மாவட்டத்தில் பகலாபுரா கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.. அவர் பெயர் மாரப்பா.. இவருக்கு அனுசியா என்ற மகள் இருக்கிறாள்... அவளுக்கு திடீரென காய்ச்சல் வந்துள்ளது.. தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்படவும், எங்கு அழைத்து செல்வது என புரியாமல் தவித்தார்..
ஆஸ்பத்திரி
யாதகிரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரி மட்டும்தான் அவருக்கு அருகில் இருக்கும் ஒரே ஆஸ்பத்திரி.. மகளை அழைத்து செல்ல மாரப்பா முடிவு செய்தார். ஆனால் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருவதால், தன்னுடைய பைக்கிலும் கொண்டு செல்ல முடியாமல் தவித்தார்.. இறுதியில், அந்த மகளை சுமந்து கொண்டு கிராமத்தில் இருந்து நடந்தே வந்தார்...
அதிர்ச்சி
சிறுமிக்கு காய்ச்சல் அளவுக்கு அதிகமாக இருக்கவும், அந்த குழந்தையால் நடக்கவும் முடியவில்லை.. அதனால், யாதகிரி மாவட்ட ஆஸ்பத்திரி வரை 8 கிலோ மீட்டர் தூரம் வரை மாரப்பா மகளை தோளில் சுமந்தபடி வந்து சேர்ந்தார்... இப்போது சிறுமிக்கு சிகிச்சை நடந்து வருகிறது.. அத்தியாவசிய கடைகள்கூட திறக்காமல், ஆஸ்பத்திரியும் மருந்தும் கிடைக்காமல், அவசரத்துக்கு வாகனங்களையும் பயன்படுத்த முடியாமல், பெற்ற தந்தையின் இந்த செயல் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.