தக் லைஃப் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்.. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு
பெங்களூர்: தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிடுவது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் வழக்கு தொடுத்துள்ளார். தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் தடை செய்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் வழக்கு தொடுத்துள்ளார்.
கன்னட மொழியின் தோற்றம் குறித்த அவரது சமீபத்திய கருத்துகளுக்கு எதிர்ப்பு நிலவும் நிலையில் வழக்கு தொடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் வெளியிடப்படுவதையும், பாதுகாப்பாக திரையிடப்படுவதையும் உறுதி செய்ய உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

தக் லைஃப் படத்திற்கு தடை
கன்னட மொழி தமிழிலிருந்து தோன்றியது என்று நடிகர் கூறியதற்காக கர்நாடகாவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இது அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள தக் லைஃப் படத்தின் வெளியீட்டை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில், எந்தவொரு இடையூறும் ஏற்படாமல் இருக்க சட்டப்பூர்வ தலையீட்டை கமல்ஹாசன் நாடியுள்ளார்.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் 'தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்' என்ற கமலஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என கன்னடம் அமைப்பினரும், கர்நாடக அமைச்சர்கள் சிலரும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். தொடர் எதிர்ப்பை தொடர்ந்து அம்மாநில வர்த்தக சபை இந்த படத்தை தடை செய்துள்ளது.
கன்னட ஆதரவு போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) கர்நாடகாவில் படத்தை வெளியிட தடை விதித்தது. கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்கு பதிலளிக்கும் விதமாக மே 30 அன்று இந்த முடிவு எடுக்கப்பட்டது. கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு 24 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டது.
ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க முடியாது.. தவறாக பேசி இருந்தால் கேட்கலாம்.. அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது என்று பதிலடி அளித்தார். இதையடுத்து தொடர் எதிர்ப்பை தொடர்ந்து அம்மாநில வர்த்தக சபை இந்த படத்தை தடை செய்துள்ளது.
வழக்கு மனுவில் என்ன உள்ளது?
இந்த நிலையில்தான் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிடுவது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரி மூலம் தாக்கல் செய்த மனுவில், கர்நாடக மாநில அரசு, காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக அமைப்புகள் படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும், திரையிடலுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.. தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.. இந்த படம் தடை செய்யப்படுவது பேச்சு உரிமை, தனிமனித உரிமைக்கு எதிரானது.. இதனால் படத்தை அனுமதிக்க காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் நகர காவல் ஆணையருக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கமல்ஹாசன் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications