மைசூர்- ஊட்டி சாலையில் விபத்தில் சிக்கிய இளம் நடிகர்.. வலது காலை இழந்ததால் பெரும் சோகம்
பெங்களூர்: கன்னட நடிகர் ராஜ்குமாரின் உறவினரின் மகனும் நடிகருமான சூரஜ்குமார் சாலை விபத்தில் வலது காலை இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி பர்வதம்மா. இவருடைய நெருங்கிய உறவினர்தான் எஸ்.ஏ.சீனிவாஸ். இவர் தயாரிப்பாளர் ஆவார்.
இவருடைய மகன் சூரஜ் குமார். இவருக்கு 24 வயதாகிறது. இவரும் நடிகர்தான். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் கடந்த சனிக்கிழமை மைசூரிலிருந்து ஊட்டிக்கு சென்றார்.

அப்போது பேகுர் அருகே மைசூர்- குண்ட்லுபேட் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 4 மணிக்கு சென்றுக் கொண்டிருந்த போது டிராக்டரை முந்தி செல்ல முயன்றார். அப்போது அவருடைய பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் எதிரே வந்த டிப்பர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சூரஜ் குமார், உடனடியாக மைசூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் சூரஜ் குமாரின் வலது கால் கடுமையாக சேதமடைந்தது.
அவருடைய உயிரை காக்கும் விதத்தில் பலத்த சேதமடைந்த வலது காலை முழங்கால் முதல் நீக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவருடைய வலதுகால் அகற்றப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூரஜ் குமாரை நடிகர் சிவராஜ்குமார், அவருடைய மனைவி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.
சூரஸ் குமார் சினிமாவுக்காக தனது பெயரை துருவன் என மாற்றிக் கொண்டார். இயக்குநர் அனூப் ஆண்டனி இயக்கிய பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா எனும் படத்தில் சூரஜ் குமார் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. தற்போது ரதம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் மலையாள நடிகை பிரியா வாரியருடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் சூரஜ் குமார் விபத்தில் சிக்கியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காலை இழந்துள்ள சூரஜ்குமாரின் சினிமா எதிர்காலம் கேள்விக்குறியானதால் அவருடைய ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications