போன் முழுக்க ஆபாசபடம்.. பெண்களை ஆடைகளின்றி வீடியோ எடுத்த அக்குபஞ்சர் நிபுணர்.. பெங்களூரில் ஷாக்
அக்குபஞ்சர் சிகிச்சை பெற வரும் பெண்களை ஆடைகளை கழற்றும்படி வற்புறுத்தி ரகசியமாக ஆபாச வீடியோ பதிவு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர்: பெங்களூரில் அக்குபஞ்சர் சிகிச்சைக்கு சென்ற பெண்களை ஆடைகளை அகற்றும்படி கூறி நிர்வாணப்படுத்தி அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்திருந்த கொடூரனை போலீசார் கைது செய்தனர். இவர் எப்படி சிக்கினார்? டெலிட் செய்யப்பட்ட வீடியோக்கள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஆந்திரா மாநிலம் கூடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடராமன் என்ற வெங்கட் (வயது 57). இவர் அக்குபங்சர் சிகிச்சை நிபுணர். இவர் பெங்களூர் மத்திக்கெரயில் கிளினிக் நடத்தி வந்தார். இவர் தனது மனைவி மற்றும் மகளை பிரிந்து பெங்களூரில் கிளினிக் வைத்துள்ளார்.
இவரது கிளினிக்கிற்கு ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் அக்குபங்சர் சிகிச்சைக்கு வந்து சென்றனர். இந்நிலையில் தான் 13 வயது சிறுமியுடன், 41 வயது நிரம்பிய பெண் அக்குபங்சர் சிகிச்சை பெற சென்றுள்ளார்.

பெண்ணிடம் வலியுறுத்தல்
இந்த வேளையில் வெங்கடராமன் ஆடைகளை கழற்றும்படி அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து வெங்கடராமன் அக்குபங்சர் சிகிச்சையின்போது உடலில் ஆடைகள் எதுவும் இருக்கக்கூடாது என அந்த பெண்ணிடம் எடுத்து கூறியுள்ளார். இருப்பினும் அந்த பெண் உடன்படவில்லை.

வீடியோ காட்டி வற்புறுத்தல்
இதையடுத்து வெங்கடராமன் தனது செல்போனில் இருந்த வீடியோ ஒன்றை காண்பித்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு பெண் உடலில் துணிகள் எதுவுமின்றி அக்குபங்சர் சிகிச்சை பெற்றது தெரியவந்தது. இந்த வீடியோவை காட்டிய வெங்கடராமன் இப்படி தான் சிகிச்சை முறை இருக்கும் என தெரிவித்தார். இந்த நிலையில் அந்த வீடியோவில் இருந்த பெண் சிகிச்சைக்கு வந்திருந்த 41 வயது பெண்ணுக்கு தெரிந்தவராக இருந்தார்.

போலீசில் புகார்
இதையடுத்து வீடியோவை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவர் விஷயத்தை தெரிவிக்க முயன்றார். இதையறிந்த வெங்கராமன் சிகிச்சைக்கு வந்திருந்த பெண் மற்றும் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தன்னை ஆபாசமாக வெங்கடராமன் வீடியோ எடுத்துள்ளதாக குற்றம்சாட்டி போலீசில் புகார் அளித்தார். இதேபோல் அவரிடம் சிகிச்சை பெற்ற பல பெண்களும் புகார் அளித்தனர்.

அதிரடியாக கைது
இதையடுத்து சிசிபி எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெங்கடராமனின் கிளினிக்கில் அதிரடியாக சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. மேலும் அவரிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் செல்போனை பரிசோதித்தபோது அதில் எந்த ஆபாச வீடியோக்களும் இல்லை. அதாவது போலீசார் வருவதை அறிந்த வெங்கடராமன் அதனை முன்கூட்டியே டெலிட் செய்திருந்தது தெரியவந்தது.

தடயஅறிவியல் ஆய்வகத்தில் ஆய்வு
இதனால் உண்மையை கண்டறிய வேண்டும் என்பதற்காக அவரது செல்போன்கள் தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. செல்போனில் டெலிட் செய்யப்பட்ட வீடியோக்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கிளினிக்கிற்கு அக்குபங்சர் சிகிச்சை பெற வந்த பெண்களை நிர்வாணப்படுத்தி ஆபாசமாக எடுத்த 50 வீடியோக்கள் பதிவு செய்திருப்பது தெரியவந்தது. ஒவ்வொரு வீடியோவும் 2 நிமிடங்கள் முதல் 12 நிமிடங்கள் வரை இருப்பது தெரியவந்தது.

குற்றப்பத்திரிகை
இந்த சாட்சிகளின் அடிப்படையில் போலீசார் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி தற்போது வெங்கடராமன் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 128 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகைகளில் 13 வயது சிறுமி உள்பட 23 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications