ஏரோ இந்தியா 2021... அமெரிக்காவின் அதி நவீன போர் விமானத்துடன்... சீறிப் பாய்ந்த இந்தியாவின் தேஜாஸ்
பெங்களூரு: ஏரோ இந்தியா 2021 கண்காட்சியில் அமெரிக்காவின் சக்தி வாய்ந்த பி 1-பாம்பர் போர் விமானங்களுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானங்களும் வானில் சாகசங்களை நிகழ்த்தின.
ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான கண்காட்சியான ஏரோ இந்தியா 2021 கண்காட்சி பெங்களூரில் எலஹங்கா விமானப்படைத் தளத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கியது. இந்தியாவில் 13ஆவது முறையாக நடைபெறும் இந்தக் கண்காட்சியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். 80 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 540 நிறுவனங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

இதில், அமெரிக்காவின் சக்தி வாய்ந்த பி 1-பாம்பர் போர் விமானங்களுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானங்களும் வானில் சாகசங்களை நிகழ்த்தின. முன்னதாக, அமெரிக்காவின் இந்த சக்திவாய்ந்த பி 1 - பாம்பர் போர் விமானம் அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்திலிருந்து கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்தது.
அமெரிக்காவின் விமானப் படையின் முக்கிய போர் விமானமான பி 1 - பாம்பர், சூப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானமாகும். அமெரிக்காவிலுள்ள ராணுவ தளத்திலிருந்து உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் திறனைக் கொண்டது இந்தப் போர் விமானம்.
இப்படி பல சிறப்புகளைக் கொண்ட இந்த பி 1 - பாம்பர் போர் விமானம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானங்களுடன் வானில் சாகசங்களை நிகழ்த்தியதாகப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நான்கு அதிநவீன என்ஜினை கொண்ட இந்த போர் விமானம், 146 அடி நீளமும் 137 அடி அகலமும் கொண்டது. மேலும் 34 அடி உயரம் கொண்ட இந்த விமானம், 86,183 கிலோ எடை கொண்டது. விமானத்தின் எடை போக சுமார் 1,20,326 கிலோ பொருட்களை விமானத்தால் தூக்கிக்கொண்டு பறக்க முடியும். சுமார் 30 ஆயிரம் அடி உயரத்தில் 9000 மைல் வேகத்தில் பறக்கும் ஆற்றல் உடையது.
இந்தியாவின் முக்கிய கூட்டணி நாடாக அமெரிக்கா இந்த விமானக் கண்காட்சியில் பங்கேற்கிறது. இந்தோ பசிபிக் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றும் என்றும் அந்நாடு தெரிவித்திருந்தது.












Click it and Unblock the Notifications