இன்னும் 2 நாளில்.. கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி காலி.. சொடுக்கு போடும் எடியூரப்பா
பெங்களுரு: இன்னும் இரண்டே நாள்களில் கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்து விடும் என்று அம்மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா நீதிமன்ற தலையீட்டினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே பதவி விலகினார்.
அதன் பின்னர் காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார். அந்த நாள் முதல் குமாரசாமி அரசை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பல முறை முயற்சி
பலமுறை தோல்வியையும் தழுவியுள்ளது. இருந்தாலும் விக்ரமாதித்தன் போல விடாமுயற்சியுடன் ஆட்சி கவிழ்ப்புக்கான வேலைகளை விடாமல் செய்து வருகிறார் எடியூரப்பா. மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியானதுமே, இந்த தேர்தல் முடிந்தவுடன் குமாரசாமி அரசு கவிழ்ந்து விடும் என்று கூறியிருந்தார்.

சுயநலம் மிக்க அரசு
இந்நிலையில் நேற்று பெங்களூருவில் எடியூரப்பா பேசுகையில், "காங்கிரசில் உள்ள எம்.எல். ஏக்கள் இந்த அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளனர். கர்நாடகாவில் இப்போது அமைந்துள்ள அரசு சுயநலத்தை அடிப்படையாக கொண்டே அமைந்துள்ளது. இந்த அரசு மக்களுக்கு எவ்வித நன்மையையும் செய்யவில்லை. இதுவரை எந்த நல்ல விசயங்களும் நடைபெறவும் இல்லை.

மக்களுக்கு நல்லது
மக்களுக்கு நல்லது செய்வதற்காக வந்த அரசு அதை செய்ய முடியவில்லை என்றால் அதன் பின்னர் ஏன் பதவியில் நீடிக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்யாத அரசு பதவியை ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும்.

ஆட்சி 2 நாளில் கவிழும்
காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைய காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் ராஜினாமா செய்யும் பட்சத்தில் இன்னும் இரண்டே நாள்களில் குமாரசாமி அரசு கவிழ்ந்து விடும். ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற அவசியம் பாஜகவுக்கு இல்லை. காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு கவிழ்ந்த பின்னர் நல்லாட்சியை கொடுக்க பாஜக தயாராக உள்ளது.

பல நன்மைகள்
இப்போதே பாஜகவுக்கு 113 எம்.எல்.க்கள் ஆதரவு உள்ளது. சுயேச்சை எம்.எல்.ஏக்கள் 2 பேர் பாஜகவை ஆதரிக்க தயாராக உள்ளதாக தெரிவித்த எடியூரப்பா ஆட்சி அமைக்க தேவையான 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தங்களுக்கு கிடைத்துவிடும் என்றும் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் கர்நாடகவுக்கு பல நன்மைகள் வந்து சேரும் " இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications