போகாதீங்க.. கோரிக்கை வைத்த கர்நாடக அரசு.. "சான்ஸே இல்லை.." அந்தர் பல்டி அடித்த ஐடி நிறுவனங்கள்
பெங்களூர்: பெங்களூரில் மழை வெள்ள பாதிப்புகள் அதிகமானதால் அங்கிருந்து வெளியேறப் போவதாக தெரிவித்த ஐடி நிறுவனங்கள், தற்போது அப்படியொரு எண்ணமே தங்களுக்கு இல்லை என கர்நாடகா அரசிடம் உறுதியளித்துள்ளன.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் அங்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. குறிப்பாக, பெங்களூர் நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது எனக் கூறும் அளவுக்கு அங்கு மழை கோரத்தாண்டவம் ஆடியுள்ளது.
குறிப்பாக, அவுட்டர் ரிங் ரோடு, பெல்லந்தூர், மகாதேவபுரா, மாரத்தஹள்ளி, சில்க் போர்டு, எச்எஸ்ஆர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மனசுக்குள்ளே ஓணம் வந்தல்லோ, வந்தல்லோ.. கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களிலும் உற்சாகம்
வெள்ளத்தால் மக்கள் கடும் அவதி
அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் தண்ணீர் புகுந்துவிட்டன. சில இடங்களில் வீட்டின் முதல் மாடி வரை மழை வெள்ளம் நிற்கிறது. இதனால் பெங்களூர் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், மழை வெள்ளத்தால் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. சில பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
அதிருப்தி அடைந்த ஐடி நிறுவனங்கள்
இதனிடையே, பெங்களூரின் 'ஐடி ஹப்' என அழைக்கப்படும் மகாதேவபுரா பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால் ஐடி நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தன. வெள்ளத்தால் ஊழியர்கள் வர முடியாமல் போனது உள்ளிட்ட காரணங்களால் சுமார் ரூ.300 கோடிக்கு மேல் ஐடி நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிருப்தியடைந்த ஐடி நிறுவனங்கள், பெங்களூரில் வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய உள்கட்டமைப்புகளை மேம்படுத்தாவிட்டால் நகரில் இருந்து வெளியேறி விடுவோம் என மிரட்டும் தொனியில் கர்நாடகா அரசுக்கு கடிதம் எழுதியிருந்தன.
வெலவெலத்து போன கர்நாடகா அரசு
கர்நாடகா அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு, ஐடி நிறுவனங்கள் மூலமாகவே கிடைக்கிறது. எனவே இந்த விஷயத்தை கர்நாடகா அரசு தீவிரமாக அணுகியது. இதனைத் தொடர்ந்து, பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களின் தலைவர்களிடம் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வந்த் நாராயன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது மகாதேவபுரா உட்பட ஐடி நிறுவனங்கள் இருக்கும் பகுதிகளில் எதிர்காலத்தில் வெள்ளம் பாதிக்காத வகையில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.
'வெளியேறும் எண்ணம் இல்லை'
அதேபோல, கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மையும் மகாதேவபுரா பகுதியை பார்வையிட்டு அங்கு வெள்ள வடிநீர் கால்வாய்களை அகலப்படுத்த அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டார். மேலும், வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் உள்ளிட்டவற்றை சீரமைக்கவும் முதல்வர் அறிவுறுத்தினார்.
அரசின் இந்த உடனடி நடவடிக்கைகளால் ஐடி நிறுவனங்கள் சமாதானம் அடைந்திருக்கின்றனர். மேலும், பெங்களூரில் இருந்து வெளியேறும் எண்ணமே தங்களுக்கு இல்லை என்றும், அரசிடம் எங்கள் குறைகளை தெரிவிக்கவே அப்படி கூறினோம்" எனவும் ஐடி நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்தனர்.