கர்நாடகாவில் காங்கிரஸ் கையிலெடுக்கும் அஸ்திரம்! நடுங்கும் பாஜக, ம.ஜ.த
பெங்களூர்: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கர்நாடகாவில் அதிக இடங்களை கைப்பற்ற காங்கிரஸ் கையில் எடுத்துள்ள அஸ்திரத்தால் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் நடுங்கி போய் உள்ளன.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பாஜக ஆட்சியை இழந்தது. அதோடு முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் அவரது மகனும் கர்நாடகா முன்னாள் முதல்வருமான குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியும் படுதோல்வியை சந்தித்தது.

குறிப்பாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி செல்வாக்காக உள்ள பழைய மைசூர் மண்டலத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில் முதல்வராக சித்தராமையாவும், காங்கிரஸ் மாநில தலைவரான டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் உள்ளார்.
இத்தகைய சூழலில் தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி பணிகளை தொடங்கி உள்ளது. அதேபோல் இழந்த செல்வாக்கை மீட்கும் முயற்சியில் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் திட்டம் வகுத்துள்ளன. அதோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்த திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி இன்னொரு அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அதோடு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம், ரேஷனில் 10 கிலோ இலவச அரிசி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சி மீது மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 20க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூர் புறநகர் தொகுதியில் டிகே சிவக்குமாரின் தம்பி டிகே சுரேசும், ஹாசனில் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வெல் ரேவண்ணாவும், மண்டியாவில் மறைந்த நடிகர் அம்பரிஷ் மனைவி சுமலதாவும் வெற்றி பெற்றனர்.
பிற 26 தொகுதிகளில் பாஜக கட்சியின் வேட்பாளர்கள் வாகை சூடினர். தற்போது கர்நாடகாவில் செயல்படுத்தும் திட்டங்கள் காங்கிரசுக்கு நாடாளுமன்ற தேர்தலில் கைக்கொடுக்கும் என்றாலும் கூட அதற்கு கூடுதல் பலம் சேர்க்க அந்த கட்சி வேறு மாதிரியான வியூகத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.
அதாவது பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைய ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமாரிடம் அவர்கள் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி பாஜக, ஜேடிஎஸ் கட்சிகளை சேர்ந்த 15 தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைய தயாராக இருக்கின்றனராம். இவர்களை கட்சியில் இணைக்க சித்தராமையா, டிகே சிவக்குமார் தயாராக உள்ளனர்.
இருப்பினும் மேலிட அனுமதியும் முக்கியம் என்பதால் சில நாட்களுக்கு முன்பு காவிரி விவகாரம் தொடர்பாக டெல்லி சென்ற முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் அங்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை(இவரும் கர்நாடகாவை சேர்ந்தவர்) சந்தித்து இதுபற்றி பேசியுள்ளனர். அதனை கேட்ட மல்லிகார்ஜூன கார்கே மாற்றுக்கட்சியினரை காங்கிரஸில் சேர்க்க பச்சைக்கொடி காட்டியுள்ளாராம்.
இதனால் டிகே சிவக்குமார் தலைமையில் விரைவில் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர். பொதுவாக தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் உள்பட பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் கூண்டோடு பாஜகவில் இணைகின்றனர். கர்நாடகாவிலும் கடந்த முறை காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியில் 15க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவி ஆட்சியை கலைத்தனர்.
இத்தகைய சூழலில் பாஜக பாணியை கையில் எடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் ‛தாமரை' கட்சிக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதேபோல் ஏற்கனவே கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் செல்வாக்கான பகுதிகளில் ஜேடிஎஸ் கட்சி வேட்பாளர்கள் தோற்றனர். இந்த காயத்தில் இருந்து இன்னும் அந்த கட்சி மீளாமல் இருக்கும் சூழலில் காங்கிரஸ் அதன் முக்கிய தலைவர்களை தட்டித்தூக்க உள்ளது. இதனால் காங்கிரஸ் திட்டத்தால் கர்நாடகாவில் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் கலங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications