ஹிஜாப் வழக்கு: இன்று தீர்ப்பு! பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! 144 தடை உத்தரவு அமல்
பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில், கர்நாடகாவில் பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பியு கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குப் படிக்கும் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரம் அப்படியே அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. கர்நாடகாவில் பல மாவட்டங்களில் முஸ்லீம் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக் கூடாது எனக் கல்வி நிறுவனங்கள் தெரிவித்தனர்.

ஹிஜாப் விவகாரம்
சில நாட்களிலேயே இந்தச் சம்பவம் அங்கு விஸ்வரூபம் எடுத்தது. மாணவிகள் ஹிஜாப் உடை அணிந்து வர சில இந்துத்துவ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கல்வி நிறுவனங்களுக்குக் காவி நிற துண்டும், சில பெண்கள் காவி நிற ஷாலும் அணிந்து வந்தனர். சில கல்லூரிகளில் இரு தரப்பு மாணவர்களும் மாறி மாறி கோஷங்களையும் எழுப்பினர். கல்லூரிகளில் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், சில நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது.

நாளை தீர்ப்பு
இதையடுத்து முஸ்லீம் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்தது. இந்தச் சூழலில் ஹிஜாப் விவகாரத்தில் இன்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. இதன் காரணமாக அங்குப் பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

விடுமுறை
பெங்களூரில் ஒரு வாரம் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உடுப்பி, தக்ஷிண கன்னடா உள்ளிட்ட பல மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. கலபுர்கி மாவட்டத்தில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு 8 மணி முதல் மார்ச் 19 காலை 6 மணி வரை 144 தடை விதிக்கப்படுவதாக மாஜிஸ்திரேட் யஷ்வந்த் வி குருகர் அறிவித்துள்ளார்.

144 தடை உத்தரவு
அதேபோல ஹிஜாப் போராட்டம் தீவிரமாக நடந்த மாவட்டங்களில் ஒன்றான ஷிவமொகாவிலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் மார்ச் 21ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கேஎஸ்ஆர்பி, மாவட்ட ஆயுதப் படை, ஆர்.ஏ.எஃப் படையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஷிவமொக்கா எஸ்.பி., பி.எம்.லட்சுமி பிரசாத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications