வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
பெங்களூர்: நாடு முழுவதும் வெப்பஅலை வீசி வரும் நிலையில் வெயிலை பொருட்படுத்தாமல் முதியவர் ஒருவர் ‛‛நான் மாற்றத்துக்காக ஓட்டுபோடுவேன். வெறுப்பை பரப்புவோருக்கு அல்ல'' என்ற பதாகையுடன் சாலையில் சுற்றி வரும் முதியவரின் வீடியோ இணையதளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. அன்றைய தினம் மொத்தம் 102 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளும் அடங்கும்.

இதையடுத்து நாளை 2வது கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மொத்தம் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் கருப்பு நிற பேண்ட், கோட், தொப்பி அணிந்துள்ள முதியவர் கையில் பதாகையை வைத்து கொண்டு நடைபாதை, சிக்னல் மற்றும் ரோடுகளில் வலம் வருகிறார். அவர் வைத்துள்ள பதாகையில் ‛‛I'll Vote For Change Not For Hate'' என எழுதப்பட்டுள்ளது. அதாவது நான் மாற்றத்துக்கான ஓட்டளிக்க இருக்கிறேன். வெறுப்பை பரப்புவோருக்கு ஓட்டளிக்கமாட்டேன் என்பது தான் அதன் அர்த்தம்.
மேலும் மாற்றத்துக்காக ஓட்டளிக்க வலியுறுத்தி பிரசாரம் செய்துள்ளதால் அவர் காங்கிரஸ் அல்லது ‛இந்தியா' கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்திருப்பதையும், அவர் பாஜகவுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் பேசும் பொருளான நிலையில் அவர் யார்? என்பது பற்றி பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளன.
அதன்படி வீடியோவை பார்த்தால் அதில் கன்னட எழுத்துகள் உள்ளன. மேலும் அந்த முதியவர் கர்நாடகா சட்டசபை கட்டடமான விதானசவுதா முன்பு நடந்து செல்வதும் வீடியோவில் உள்ளது. இதன்மூலம் அந்த முதியவர் பெங்களூரில் தான் இந்த பிரசாரத்தை மேற்கொண்டதை நம்மால் உறுதி செய்ய முடியும். இருப்பினும் அந்த முதியவரின் பெயர் என்ன? அவரது சொந்த ஊர் என்ன? என்பது பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
கர்நாடகாவை பொறுத்தவரை மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் பெங்களூரில் உள்ள 3 லோக்சபா தொகுதிகள் உள்பட 14 தொகுதிகளுக்கு நாளை முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 7 ம் தேதி 2வது கட்டமாக மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications