அண்ணாமலை கையில் முக்கிய பொறுப்பை கொடுத்த ஜேபி நட்டா.. கர்நாடக தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக நியமனம்!
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூர்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்துள்ளார் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா.
கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தற்போது அம்மாநில அரசியலில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்திற்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது பாஜக தலைமை. பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கில் போட்டியிட தயங்கும் பாஜக! பின்வாங்குவது ஏன்? அண்ணாமலை - சிடி ரவி சொன்னது என்ன?
கர்நாடகா தேர்தல்
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. வரும் மே மாதத்தோடு கர்நாடகாவில் பாஜக அரசின் பதவிகாலம் முடிவுக்கு வருகிறது. இதனால், வரும் ஏப்ரல் - மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
2024க்கு முன்னோட்டம்
கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தற்போது அம்மாநில அரசியலில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ், பாஜக, மஜத என அரசியல் கட்சிகள், கட்சிப் பணிகளிலும், தேர்தல் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சட்டமன்றத் தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக தென் மாநிலங்களில் கருதப்படும் என்பதால், கட்சிகள் இதில் முனைப்பு காட்டி வருகின்றன.
பொறுப்பாளர்கள் நியமனம்
இந்நிலையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்பு
2020ல் பாஜகவில் சேர்ந்த அண்ணாமலைக்கு 2021ல் தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பு கிடைத்தது. இந்நிலையில், 2023 கர்நாடகா சட்டமன்ற தேர்தல் இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாமலை சுமார் 9 ஆண்டு காலம் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர், எனவே, அண்ணாமலைக்கு கர்நாடகாவில் ஓரளவுக்கு செல்வாக்கு இருப்பதால் அவருக்கு அங்கு தேர்தல் இணை பொறுப்பாளராக முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.