பெங்களூரில் பதற வைக்கும் சம்பவம்! கன்னடம் தெரியாத நபரிடம் மிரட்டி பணம் பறிக்க முயற்சி.. ஷாக் வீடியோ
பெங்களூர்: பெங்களூரில் கன்னடம் தெரியாத வெளிமாநிலத்தை சேர்ந்த ஒருவர் சென்ற காரை வழி மறித்த மர்ம நபர் ஒருவர், அந்த காரின் கண்ணாடியை திறக்குமாறு வைஃபரை உடைத்து, கார் கண்ணாடியை உடைக்க முயற்சித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்ளில் தற்போது வைரலாகி வருகிறது.
நாட்டின் டெக் நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் குவிந்துள்ளன. இங்குள்ள ஐடி நிறுவனங்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றுகிறார்கள். ஐடி துறையை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் என நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பெங்களூரில் தங்கியிருந்து பணி செய்து வருவதை காண முடிகிறது. தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பெங்களூரில் குடும்பத்துடன் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர்.

பெங்களூரில் வசிக்கும் வெளிமாநில மக்கள் பெரும்பாலானோருக்கு உள்ளூர் மொழியான கன்னடம் தெரியாது என்பதால், இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றை அதிகம் பேசுவதை காண முடியும். இந்த நிலையில்தான், சமீப காலமாக பெங்களூரில் வசிக்கும் வெளிமாநில மக்களை குறிவைத்து அதாவது கன்னடம் தெரியாத நபர்களை குறிவைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் தற்போது பதைபதைக்க வைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றன. இது பற்றிய விவரம் வருமாறு:- பெங்களூரில் உள்ள பெல்லந்தூர் அவுட்டர் ரிங் ரோடு பகுதியில், வெளி மாநிலத்தை சேர்ந்த ஒருவர் காரில் வந்து கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு காரை திடீரென பின் தொடர்ந்து துரத்தி வந்த நபர் ஒருவர் காரை வழிமறித்து, வாகன ஓட்டியிடம் தகராறு செய்கிறார்.
முன்பின் தெரியாத நபர் திடீரென வந்து வம்பிழுப்பதால் பயத்துடன் இருந்த அந்த வாகன ஓட்டி, தனது செல்போனில், அந்த நபரை வீடியோ எடுத்தார். இதனால், மேலும் ஆத்திரம் அடைந்த அந்த நபர், காரின் கண்ணாடியை திறக்குமாறு ஆக்ரோஷத்துடன் ஜன்னல் கண்ணாடியை தட்டினார். ஜன்னலை திறந்தால் தாக்கப்படுவோம் என உணர்ந்த வாகன ஓட்டியோ... உஷாராக ஜன்னலை திறக்காமல் காரை அங்கிருந்து நகர்த்த முயற்சித்தார்.
இதனால் விடாமல் தகராறு செய்த நபர், காரின் வைஃபரை பிடுங்கி, முன்பக்க கண்ணாடியை அடித்து உடைக்க முயற்சிக்கிறார். அதற்குள் காருக்குள் இருந்த வாகன ஓட்டி, பதற்றத்துடன் இந்தியில் பேசி காவல்துறையிடம் உதவி கேட்கிறார். நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்ளில் தற்போது வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பெல்லாந்தூர் காவல் நிலைய போலீசார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வாகன ஓட்டியை மிரட்டி தகராறில் ஈடுபட்ட நபர் நவீன் ரெட்டி என்பதும் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவரான நவீன் ரெட்டி, கன்னடம் பேச தெரிந்து கொண்டு, பிற மாநிலத்தவர்களிடம் தகராறு செய்ததும் தெரியவந்தது.
நவீன் ரெட்டியை கைது செய்த போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்தனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில், ''சாலைகளில் இது போன்று தகராறில் ஈடுபட்டால் உடனடியாக 112 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். பெங்களூரில் தொடர்ந்து கன்னடம் தெரியாத நபர்களை டார்கெட் செய்து நடைபெறும் வழிப்பறி அதிகரிப்பதால் உரிய நடவடிக்கை எடுத்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications