"பிராமண மரபணு.. தாழ்த்தப்பட்ட மக்கள்.." பிரபல பெங்களூர் சிஇஓ சர்ச்சை போஸ்ட்! பற்றி எரியும் ட்விட்டர்
பெங்களூர்: இப்போது ட்விட்டர் தளத்தில் பிராமணர் மற்றும் பிராமிண் ஜீன் ஆகிய ஹேஷ்டேக்குகள் திடீரென டிரெண்டாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள பிரபல நிறுவனத்தின் சிஇஓ பதிவிட்ட போஸ்ட் தான் இவை அனைத்திற்கும் காரணம். இதன் பின்னணி என்ன.. ஏன் இப்போது இந்த ஹேஷ்டேக் டிரெண்டாகிறது என்பதைப் பார்க்கலாம்.
பெங்களூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தின் சிஇஓ அனுராதா திவாரி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது போட்டோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

போட்டோ தானே அதில் என்ன இருக்கு எனக் கேட்கலாம்.. அந்த போட்டோவை "பிராமண மரபணு" என்று கூறி பகிர்ந்ததே இந்த விவாதத்திற்குக் காரணமாகும். அதைத் தொடர்ந்தே இப்போது பிராமணர் மற்றும் பிராமிண் ஜீன் ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.
பெங்களூர் நிறுவன சிஇஓ: கடந்த சில நாட்களாக அவரது இந்த போஸ்டுக்கு ஆதரவாகும் எதிராகும் இணையத்தில் பலரும் பல வித கருத்துகளைக் கூறினர். இதையடுத்து கடந்த ஆக. 23ம் தேதி அனுராதா திவாரி மீண்டும் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், "எதிர்பார்த்தபடியே பிராமணர் என்ற ஒரு வார்த்தையே பல தாழ்த்தப்பட்ட மனிதர்களைத் தூண்டிவிட்டு இருக்கிறது. உண்மையான சாதிவெறியர்கள் யார் என்பதை இது காட்டுகிறது. இந்தியக் கட்டமைப்பில் உயர் சாதியினருக்கு எதுவுமே கிடைப்பதில்லை. இட ஒதுக்கீடு, இலவசங்கள் என எதுவுமே இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் சொந்தமாகச் சம்பாதிக்கிறோம். எனவே, எங்கள் வம்சத்தைப் பற்றி பெருமிதம் கொள்ளும் எல்லா உரிமையும் எங்களுக்கு இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
சர்ச்சை: அவரது இந்தக் கருத்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியது. வெகு சிலர் மட்டுமே அவரது கருத்தில் நியாயம் இருப்பதாகத் தெரிவித்தனர். அதேநேரம் பலரும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து துளியும் தெரியாமல் அவர் இதுபோல பேசுவதாகத் தெரிவித்தனர். குறிப்பாக இட ஒதுக்கீடு குறித்த அவரது கருத்து மிக மோசமானது என்று பரலும் விமர்சித்தனர்.
இதற்கிடையே நேற்று அவர் மீண்டும் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில் அவர், "நான் பெருமைக்குரிய தலித்/ முஸ்லிம்/ பழங்குடியினர் என்று சொல்வது சரி. ஆனால் பெருமைக்குரிய பிராமணர் என்று சொல்வது மட்டும் தவறு என்கிறார்கள். இந்த முழு அமைப்பும் பிராமணர்கள் இருப்பதே தவறு என்ற குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதை மாற்ற வேண்டிய நேரம் இது. பிராமணர்கள் மாற வேண்டிய நேரம் இது. துணிச்சலாக இருங்கள். சமூக நீதி போராளிகள் என்று தங்களை தாங்களே அழைத்துக் கொள்வோருக்குப் பாடமெடுக்க வேண்டிய நேரம் இது" என்று பதிவிட்டார்.
ஆதரவும் எதிர்ப்பும்: அவரது இந்த கருத்தை ஒரு தரப்பினர் ஆதரித்து வருகிறார்கள். அனுராதா திவாரி சொல்லியிருப்பது மிக மிகச் சரி என்றும் இப்போது பிராமணர்கள் மட்டுமே பல பிரச்சினைகளைச் சந்தித்து வருவதாகவும் ஒரு தரப்பினர் பதிவிட்டு வருகிறார்கள். அதேநேரம் இன்னும் சிலர் மற்றவர்களை விட தங்கள் உயர்ந்தவர்கள் என்று கருதும் நபர்கள் நிச்சயம் சமத்துவத்திற்காகப் போராட மாட்டார்கள் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.
டிரெண்டிங்: இதற்கிடையே அனுராதா திவாரி இன்று காலை மீண்டும் ஒரு போஸ்ட்டை பதிவிட்டுள்ளார். அதில் அவர், "இன்று பிராமணர்கள் தங்கள் முழுப் பெயரை சொல்லக் கூட பயப்படுகிறார்கள். நம் மீது அவ்வளவு வெறுப்பு பரப்பப்பட்டுள்ளது. சமூக நீதி ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எங்களை வில்லன்களாகவே ஆக்கியுள்ளனர். நாங்கள் இங்கு யாருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. எங்களுக்கு அரசிடம் இருந்தும் எந்த உதவியும் இல்லை. கடினமா உழைத்தே ஒவ்வொன்றும் செய்ய வேண்டி இருக்கிறது. நாங்கள் ஏன் எங்கள் சாதியை நினைத்து வெட்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்தே இப்போது பிராமணர்கள் மற்றும் பிராமண மரபணு ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications