10 வருஷ வேலை..ஒரே ட்வீட்டில் மொத்தமா போச்சு!பஹ்ரைனில் புலம்பும் பெங்களூர் மருத்துவர்! காரணம் இதுதான்
பெங்களூர்: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் 14வது நாளாக இன்றும் தாக்குதலை நீடித்து வருகிறது. இந்நிலையில், பஹ்ரைனில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பெங்களூரை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் ஒருவர், பாலஸ்தீனத்திற்கு எதிராக சோஷியல் மீடியாவில் போஸ்ட் போட்டதால் அவரை மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்திருக்கிறது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.
மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 13 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் தங்கள் நாட்டை சேர்ந்த சில பிணை கைதிகளை மீட்டிருக்கின்றனர். இருப்பினும் இன்னும் அதிகமான பிணை கைதிகளை இஸ்ரேல் மீட்க வேண்டியிருக்கிறது. மட்டுமல்லாது காசாவையும், ஹமாஸ் படையையும் முற்றிலுமாக அழிப்போம் என இஸ்ரேலிய ராணுவம் உறுதியேற்றுள்ளதால், இந்த தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போது வரை காசாவில் 1,500 குழந்தைகள் உட்பட 3,785 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 12,400 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை அளிக்க போதுமான அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் தற்போது காசா வசம் கிடையாது. குடியிருப்புகள் மீதும் இஸ்ரேல் குண்டுகளை வீசுவதால், சுமார் 4.25 லட்சம் மக்களை ஐநா, பள்ளிக்கூடங்களில் தங்க வைத்திருக்கிறது. பெண்கள், குழந்தைகள் தவிர்த்து 15 மருத்துவர்களும் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் 23
இதெல்லாம் ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் 14ம் நாளாக இன்று அதிகாலையில் காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. காசாவின் கிரீக் ஆர்த்தடாக்ஸ் தேவாலய வளாகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பெண்கள் பலியாகியுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஓரணயில் திரண்டுள்ளன. இப்படி இருக்கையில் இஸ்லாமிய நாடான பஹ்ரைனில் வேலை வந்த, பெங்களூரை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் ஒருவர் பாலஸ்தீனத்திற்கு எதிராக சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தால் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
டாக்டர் சுனில் ஜே ராவ், பஹ்ரைனில் உள்ள ராயல் பஹ்ரைன் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவர் தொடர்ச்சியாக பாலஸ்தீனத்திற்கு எதிராக X சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வந்ததாக புகார்கள் எழுந்திருக்கின்றன. இதனையடுத்துதான் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "சுனில் ராவ் பதிவிட்டது அவரது தனிப்பட்ட கருத்து. அந்த கருத்துக்கும் மருத்துவமனைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இருப்பினும் இது சர்ச்சைக்குரிய விவகரம் என்பதால் அவர் பணி நீக்கம் செய்யப்படுகிறார்" என்று கூறியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், "x சோஷியல் மீடியாவில் நான் வெளியிட்ட கருத்துகளுக்கு வருந்துகிறேன், மன்னிப்பு கேட்கிறேன். நான் ஒரு மருத்துவர் என்பதால் எல்லா உயிர்களும் முக்கியம் என்று கூறுகிறேன். கடந்த 10 வருடங்களாக நான் இந்த நாட்டில் இருக்கிறேன், இந்த நாட்டு மக்களையும் மதத்தையும் மதிக்கிறேன்" என்று கூறியுள்ளார். இருப்பினும் நெட்டிசன்கள் பலர் இவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாலஸ்தீனத்திற்கு எதிராக போஸ்ட் போட்டு 10 ஆண்டுகாலமாக செய்து வந்த பணியை மருத்துவர் ஒருவர் இழந்திருப்பது, பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications