நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்கா.. பெங்களூர் மான்யதா டெக் பார்க்கிற்கு சீல்!
பெங்களூர்: 70 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வரி செலுத்தாததால், பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் மான்யதா டெக் பார்க் நிறுவனத்தை மூடி சீல் வைத்தனர்.
வடக்கு பெங்களூர் பகுதியின், நாகவாரா ஏரியாவில் உள்ளது மான்யாதா தொழில்நுட்ப பூங்கா. இந்தியாவிலேயே மிகப் பெரிய சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்கா இதுதான். 300 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய அளவில் இந்த தொழில்நுட்ப பூங்கா அமைந்துள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் இங்கு உள்ளன. காக்னிசண்ட், பிலிப்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், ஐபிஎம், லார்சன் அண்ட் டூப்ரோ உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்கள் இந்த தொழில் நுட்பபூங்காவில் இயங்கி வருகின்றன.

சொத்துவரி
2001-ல் செயல்பாட்டுக்கு வந்த தொழில்நுட்ப பூங்காவில் மொத்தமாக 150,000 பணியாளர்கள் தற்போது வேலையில் இருக்கிறார்கள். மான்யதா தொழில்நுட்ப பூங்கா உரிமையாளர்கள் பெங்களூர் மாநகராட்சிக்கு கிட்டத்தட்ட 70 கோடிரூபாய் சொத்து வரி செலுத்த வேண்டும். ஆனால் அவர்கள் சொத்து வரி செலுத்தாததால், நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்போதும் அவர்கள் சொத்துவரியை செலுத்தாததால், பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் இந்த நிறுவனத்தை மூடி சீல் வைத்தனர்.

வாரண்ட்
இதுகுறித்து பெங்களூர் மாநகராட்சி இணை ஆணையர் பூர்ணிமா கூறுகையில், "டெக் பார்க் உரிமையாளர்கள் நிலுவையில் உள்ள 70 கோடி ரூபாய் சொத்து வரி செலுத்தத் தவறினார்கள். அவர்களுக்கு பல முறை இதுகுறித்து எச்சரித்து நோட்டீஸ் அனுப்பி இருந்தோம். ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இத்தனை நாட்களாக வரி செலுத்தாததால், சீல் வைக்கவேண்டியதாகிவிட்டது. அதோடு அவர்களுக்கு வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.

இது புதிதல்ல
பெங்களூர் மாநகராட்சிக்கு மான்யதா டெக் பார்க் சொத்து வரி செலுத்தாமல் இருப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே கடந்த 2016 -ம் ஆண்டிலும், வரிகளை செலுத்தாததற்காக தொழில்நுட்ப பூங்காவிற்குள் உள்ள அலுவலகங்களில் இருந்து பொருட்களைப் பறிமுதல் செய்ய லாரிகளுடன் வந்தது பெங்களூர் மாநகராட்சி. பெங்களூரில் சொத்து வரி செலுத்தாமல் இருக்கும் பல கம்பெனிகளை குறிவைத்துள்ளது பெங்களூர் மாநகராட்சி.

வழக்கு நிலுவையில் உள்ளது
மான்யதா டெக் பார்க் நிர்வாகத்தினர் கூறுகையில், பெங்களூர் மாநகராட்சிக்கு எதிராக மான்யதா டெக் பார்க் நிறுவனத்தினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த சொத்துவரி தொடர்பான வழக்கு தற்போது கர்நாடக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அதுவரை இதுகுறித்து மேலும் எதுவும் கருத்து தெரிவிக்கமுடியாது'' என்றனர்.












Click it and Unblock the Notifications