ராமேஸ்வரம் கபேயில் அந்த 7 நிமிடங்கள்! ரவா இட்லி சாப்பிட்ட மஃப்ளர் ஆசாமி யார்? AI உதவியை நாடிய போலீஸ்
பெங்களூர்: பெங்களூர் உணவகத்தில் ரவா இட்லி சாப்பிட்ட மர்மநபரின் முகத்தை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உதவியை காவல் துறை நாடியுள்ளது.
பெங்களூர் குண்டனஹள்ளி பகுதியில் உள்ளது ராமேஸ்வரம் கஃபே. இங்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 1) மதியம் 1 மணியளவில் பயங்கர வெடி சப்தம் கேட்டது. அங்கிருந்தவர்கள் ஓடி போய் பார்த்த போது உணவகத்தின் முன்பகுதி சேதமடைந்தது. அங்கு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இந்த சம்பவத்தில் உணவகத்தில் இருந்தவர்கள் சிலர் காயமடைந்தனர். அவர்கள் ப்ரூக்ஃபீல்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்தனர். தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
சிலிண்டர் வெடிப்பா: இந்தச் சம்பவத்தில் உணவகத்தில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 9 பேர் காயமடைந்தனர். இது சிலிண்டர் வெடிப்பால் நிகழ்ந்திருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆராய்ந்த போதுதான் அது குண்டுவெடிப்பு என தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேஜஸ்வி சூர்யா: இந்த நிலையில் இது குறித்து பெங்களூர் தெற்கு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் ராமேஸ்வரம் கஃபேவுக்கு போன் செய்து கேட்டேன். அப்போது வாடிக்கையாளர் விட்டு சென்ற கைப்பையில் இருந்துதான் ஏதோ வெடித்துள்ளது. சிலிண்டர் ஏதும் வெடிக்கவில்லை என்றார். இது ஏதோ குண்டுவெடிப்பு போல் உள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தெளிவான பதிலைத் தர வேண்டும் என கூறியிருந்தார்.
சித்தராமையா பதில்: இந்த நிலையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவோ இது குண்டுவெடிப்புதான். ஆனால் இதற்கும் மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை பாஜக அரசியலாக்க வேண்டாம். இந்த சம்பவம் குறித்து ஆய்வறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உரிமையாளர் சொன்னது யார்: இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் திவ்யா ராகவேந்திர ராவ் கூறியிருப்பதாவது: உணவகத்திற்கு வந்த நபர் ரவா இட்லியை சாப்பிட்டுவிட்டு ஒரு பையை அந்த இடத்திலேயே விட்டுச் சென்றார். குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது என் செல்போன் என்னுடன் இல்லை. பிறகு என் போனை எடுத்து பார்த்தால் நிறைய பேரின் மிஸ்டு கால்கள் இருந்தன. உடனே என் உணவக ஊழியர்களை நான் அழைத்தேன்.
ரத்தக் கறை இல்லை: அப்போது அவர்கள்தான் குண்டுவெடிப்பு குறித்து கூறியிருந்தனர். முதலில் உணவக சமையலறையில் ஏதாவது பொருள் வெடித்திருக்கும் என நினைத்தேன். சமையல் அறையில் ரத்த கறையோ ஊழியர்களுக்கு காயங்களோ என்பது தெரியவந்தது. அப்போதுதான் வாடிக்கையாளர் அமரும் பகுதியிலிருந்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது தெரியவந்தது.
ரவா இட்லி ஆர்டர்: சிசிடிவி காட்சிகளை பார்த்த போது ஒரு நபர் மாஸ்க் அணிந்து கொண்டு மப்ளர் போட்டபடியே பில்லிங் கவுன்ட்டரில் இருந்தார். அவர் ரவா இட்லியை ஆர்டர் செய்தார். ஆர்டரை கொடுத்துவிட்டு ஒரு கார்னரில் அமர்ந்திருந்தார். ரவா இட்லியும் வந்தது. அதை முழுவதுமாக சாப்பிட்டார். சுமார் 11.44 மணிக்கு வெடிகுண்டு இருக்கும் பையை உணவகத்தில் வைத்துவிட்டு வெளியேறுகிறார்.
ஒரு மணி நேரம் கழித்து வெடித்த குண்டு: மதியம் 12.55 மணிக்கு அதாவது ஒரு மணி நேரம் கழித்துதான் குண்டு வெடித்தது. சுமார் 7 நிமிடங்கள் உணவகத்தில் இருந்த மர்மநபர் தனது பையை குப்பைத் தொட்டிக்கு அருகே வைத்துவிட்டு சென்றுவிட்டார். இவ்வாறு உரிமையாளர் திவ்யா தெரிவித்துள்ளார்.
யார் அந்த மர்ம நபர்: சிசிடிவி காட்சிகளை கொண்டு முக்கிய ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் பேருந்து நிலையத்தில் பதிவான காட்சிகளையும் வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த நபரின் முகத்தை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications