ஆஹா இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா? மெட்ரோ ரயிலில் கோபிமஞ்சூரியன் சாப்பிட்டவருக்கு ரூ.500 அபராதம்! ஏன்?
பெங்களூர்: பெங்களூரில் மெட்ரோ ரயிலில் ஆசையாக கோபி மஞ்சூரியன் சாப்பிட்ட நகைக்கடை ஊழியருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அதன் பின்னணியில் உள்ள பலருக்கும் தெரியாத ரூல்ஸ் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை நடைமுறையில் உள்ளது. முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பலரும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்த தொடங்கின உள்ளனர்.

குறிப்பாக காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி செல்வோர், அலுவலகம் செல்வோர் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தான் தற்போது தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவையை பெங்களூர் நகர் முழுவதும் விஸ்தரிப்பு செய்வதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது. அதாவது மெட்ரோ ரயிலில் பயணித்த ஒருவர் கோபி மஞ்சூரியனை சுவைத்து சாப்பிடுகிறார். அவர் சாப்பிடுவதை ஒருவர் வீடியோ எடுக்கிறார். இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இது மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் கவனத்துக்கு சென்றது.
இதுபற்றி விசாரிக்கப்பட்டது. விசாரணையில் மெட்ரோ ரயிலில் கோபி மஞ்சூரியன் சாப்பிட்டவர் ஜெயநகரில் உள்ள நகைக்கடையில் பணியாற்றி வரும் சுனில் குமார் என்பது தெரியவந்தது. மேலும் அவர் தினமும் மல்லேஸ்வரத்தில் உள்ள சம்பிகே ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஜெயநகருக்கு சென்று வருவதும் தெரியவந்தது.

அதோடு அந்த வீடியோவை சுனில் குமாரே தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அங்கிருந்து தான் இந்த வீடியோ பகிரப்பட்டு வேகமாக பரவியதும் தெரியவந்தது. இதையடுத்து மறுநாள் சம்பிகே ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் காலை 9.30 மணிக்கு அவர் ரயில் ஏற வந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அவரை பிடித்து ஜெயநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஜெயநகர் போலீசார் அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். இந்நிலையில் தான் அபராதத்துக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மெட்ரோ ரயில்களில் சுத்தத்தை கருத்தில் கொண்டு உணவு சாப்பிட அனுமதியில்லை. இதுதொடர்பாக பல இடங்களில் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த விதியை மீறி சுனில் குமார் மெட்ரோ ரயிலில் பயணித்தபோது கோபி மஞ்சூரியன் சாப்பிட்டதால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனால் இனி மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் அங்கு உணவு உள்ளிட்டவற்றை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். அதோடு மெட்ரோ ரயில்களில் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? என்பது குறித்த விபரங்களை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்வது முக்கியமாகும்.












Click it and Unblock the Notifications