பெங்களூரில் ஒரே இரவில் கொட்டித்தீர்த்த 136 மிமீ கனமழை.. சில இடங்களில் வெள்ளம்! படகில் மக்கள் மீட்பு
பெங்களூர்: பெங்களூரில் நேற்று இரவு இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஹொரமாவு ஏரியாவில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பு படையினர் ரப்பர் படகு மூலம் மீட்டனர்.
கோடை காலம் தொடங்கினாலும் கூட பெங்களூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பெங்களூர் மட்டுமின்றி பெங்களூர் புறநகர், ராமநகர், சிக்பள்ளாப்பூர், கோலார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் தணிந்தது.

இந்நிலையில் தான் நேற்று இரவு முதல் பெங்களூரில் கனமழை பெய்ய தொடங்கியது. நேற்று இரவு முதல் இன்று அதிகாலை 5.30 மணி வரை பல இடங்களில் இடைவிடாது மழை பெய்தது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை மே மாதத்தில் மழை பெய்துள்ளது. பெங்களூரில் அதிகபட்சமாக கெங்கேரியில் மழை பெய்துள்ளது. கெங்கேரியில் 132 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்ததாக கோரமங்களாவில் 96.5 மில்லி மீட்டர், எச்ஏஎல் ஏர்போர்ட்டில் 93 மிமீட், கொட்டிகேபாளையாவில் 92.5 மில்லி மீட்டர், வித்யாபீடமில் 92.5 மில்லி மீட்டர், மாரத்தஹள்ளியில்91.5 மில்லி மீட்டர் பெய்துள்ளது. இதுதவிர 20க்கும் அதிகமான வார்டுகளில் 70 மில்லி மீட்டரை விட அதிக மழை பெய்துள்ளது.
இந்த கனமழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் குடியிருப்புகள், சாலைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெங்களூர் சாந்தி நகரில் உள்ள பிஎம்டிசி டெப்போ மற்றும் தலைமை அலுவலகத்தில் மழைநீர் சூழ்ந்தது. அதேபோல் சாந்திநகரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் தரைதளம் வெள்ளத்தில் மூழ்கியது. கோரமங்களா 4வது பிளாக்கில் உள்ள வீடுகளை முட்டளவுக்கு தண்ணீர் சூழ்ந்தது. சில்க்போர்டு ஏரியாவில் சூழ்ந்த வெள்ளத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தேங்கிய தண்ணீரை வெளியேற்ற சாலைகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் உடைக்கப்பட்டன.
ஹொரமாவு ஏரியாவை சுற்றிய பல இடங்களில் ல் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. சாய் லேஅவுட் பகுதியில் மீட்பு படையினர் ரப்பர் படகு வைத்து மீட்பு பணியை மேற்கொண்டனர். எச்சபிஆர் லே-அவுட்டில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த கனமழையின் காரணமாக இன்று காலையில் அலுவலகம் புறப்பட்ட மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
மேலும் சாலைகளில் தேங்கிய தண்ணீரில் வாகனத்தை ஓட்டி சென்றனர். அப்போது சிலரது வாகனம் பழுதானது. இதனால் அவர்கள் மழை நீரில் இறங்கி வாகனத்தை தள்ளியபடி பெரும் அவதிப்பட்டனர்.பெங்களூரை பொறுத்தவரை இன்றும் மழைக்கான மஞ்சள் அலர்ட் என்பது விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக மழைக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும்போது மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கும். 24 மணிநேரத்தில் குறைந்தபட்சம் 64.5 மில்லி மீட்டர் முதல் அதிகபட்சமாக 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாாம் இடி, மின்னலுக்கும் வாய்ப்பு ஏற்படலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications