தினமும் இரவில் கொட்டித் தீர்க்கும் கன மழை: வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூர்
பெங்களூர்: தினமும் மாலையில் பெய்து வரும் கன மழையால் பெங்களூரின் தாழ்வார பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
பெங்களூரில் கடந்த நான்கு நாட்களாக தினமும் மாலையில் இருந்து இரவு வரை கன மழை கொட்டித்தீர்க்கிறது. மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், சாக்கடை கால்வாயில் தவறிவிழுந்த 9 வயது சிறுமி இறந்த சம்பவம் பெங்களூரின் பன்னேருகட்டா சாலை, பிலேஹள்ளி பகுதியில் நடந்தது.
இந்நிலையில், நேற்றும் மாலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை கொட்டியது. இரவு 11.30 மணி வரையில் 42.3 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலையில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவர்கள் மழையில் சிக்கிக்கொண்டதால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் டிராபிக் நெரிசல் கட்டுக்குள் அடங்காமல் சென்றது. சாலைகளில் முழங்கால் அளவுக்கு ஓடிய மழை நீரில் வாகன ஓட்டிகள் அவஸ்தைப்பட்டனர்.
ஆஸ்டின் டவுன், மாகடி ரோடு, சுங்கதகட்டே, பாதராயனபுரா, பசவனகுடி என்.ஆர்.காலனி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் சென்றதால் இரவு முழுவதும் அவர்கள் தூக்கமின்றி விழித்திருந்து தண்ணீரை வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அல்சூரில் வீடு இடிந்து இருவர் பலியாகினர்.
இன்று பகலில் பெங்களூரில் வானம் மேகமூட்டமின்றி தெளிவாக காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்ய கூடும். ஹுட்ஹுட் புயல் காரணமாக இன்னும் 24 மணி நேரத்திற்கு பெங்களூரில் மழை பெய்யும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications